Published : 08 Jul 2023 02:26 PM
Last Updated : 08 Jul 2023 02:26 PM

நெதர்லாந்து அரசியலில் திடீர் திருப்பம் - பதவியை ராஜினாமா செய்தார் பிரதமர் மார்க் ரூட்

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து அரசியலில் பரப்பரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்து நெதர்லாந்தில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை கொடுப்பது தொடர்பான மசோதாவை நிறைவேற்ற ஆளும் கூட்டணி அரசு முயன்ற நிலையில், மசோதாவுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரதமர் மார்க் ரூட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க் ரூட், “புலம்பெயர்ந்தோர் மசோதா தொடர்பாக கூட்டணி கட்சிகள் வேறுபட்ட கருத்தை கொண்டிருந்தன என்பதில் எந்த ரகசியமும் இல்லை. இன்று துரதிருஷ்டவசமாக அந்த வேறுபாடுகள் தீர்க்க முடியாதவையாக ஆகிவிட்டன என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து என் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். அமைச்சரவை முழுவதும் ராஜினாமா செய்வதை எழுத்துப்பூர்வமாக அரசரிடம் ஒப்படைப்பேன்” என்றார்.

இதையடுத்து, 150 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட நெதர்லாந்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புலம்பெயர்ந்தோர் பிரச்சனை நெதர்லாந்து அரசியலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக நெதர்லாந்தில் அடைக்கலம் வேண்டி வந்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2021 இல் 36,620 ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு 47,991 ஆக உயர்ந்தது. பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் சிரியாவிலிருந்து வந்துள்ளனர் என்று நெதர்லாந்து குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம் வரை 16,097 பேர் நெதர்லாந்தில் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த விண்ணப்பங்கள் 70,000 ஆக இருக்கும் என்று நெதர்லாந்து அரசு மதிப்பிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x