Published : 14 Dec 2022 06:13 AM
Last Updated : 14 Dec 2022 06:13 AM

முதலில் மாற வேண்டியது நாம்தான்... பதின் பருவக் குழந்தைகளின் பிரச்சினைகள்

சக.முத்துக்கண்ணன்

பத்தாண்டுகளுக்கு முந்தைய நிலையை ஒப்பிடும் போது, இன்றைய பதின் பருவத்தினரின் தாவல் மும்மடங்கு பெரிது. அன்றாடங்களில் உடன் இருக்கும் பெற்றோரும் ஆசிரியரும் அவர்களுக்கு இணையான புதுப்பித்தலோடு இல்லை. அவர்களைப் புரிந்து கொள்வதிலும் அணுகுவதிலும் சிக்கல்கள் உள்ளன.

வித்தியாசமாக முடிவெட்டுவதையும், வெகு சிலரின் பாலியல் ஆர்வத்தையும் பொதுமைப்படுத்தி ‘இப்பல்லாம் ரொம்பக் கெட்டுப் போயிட்டாங்க' என்கிற பழைய பாட்டையே பாடுகிறார்கள். பதின் பருவப் பிரச்சனைகளை பொதுவெளியில் கவனிக்க மட்டுமே முடியும். அதைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பை வகுப்பறைகள் தான் ஏற்க வேண்டும்.

துரதிஷ்டவசமாக பதின் பருவத்தின் மிக முக்கியமான கட்டத்தில் அவர்கள் பொதுத்தேர்வுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அதே சூழலுக்குள் இருக்கும் ஆசிரியர்களுக்கு இதுபெரும் சவால். சவாலை எதிர்கொண்ட முன்னுதாரணங்கள் நம்மிடம் இல்லா மல் இல்லை.

ஒரு நாள் பாக்கெட்டில் சீப்பு வைத்திருக்கும் ஒரு மாணவனை உடற்கல்வி ஆசிரியர் பார்த்து விடுகிறார். வழக்கம் போல அவனுக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. ‘எல்லாரும் பாக்குறாங் களே' என்கிற மனநிலை அப்பருவத்தினரை உலுக்கும். பேரதிர்வை உண்டாக்கி அவர்களது சமநிலையைக் குலைக்கும். அந்த நாள் பாடவேளைகள் அனைத்தையும் காலி செய்யும்.

சீப்பு ரொம்ப சாதாரண விசயம். அதே பள்ளியில் ஆசிரியர் அறையில் கண்ணாடியோ சீப்போ இருக்கலாம். ஆசிரியர்கள் பாக்கெட்டிலும் ஆசிரியைகள் கைப்பையிலும் சீப்பு வைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. தான் செய்கிற ஒன்றை மாணவர் செய்யக்கூடாது என்கிற மனநிலையிலிருந்து விடுபட வேண்டும். இது பதின் பருவத்தினரோடு சம்பந்தப்பட்டதில்லை. அடிப் படையானது.

தண்டனை கண்டிப்பு போன்ற பழைய நடவடிக்கைகளில் இருந்தே நாம் மீளவில்லை. இந்நிலையிலிருந்தே மாறாத பள்ளியும் சமூகமும் முற்றாக திரும்பி நிற்க ஒரே வழி - புதிய அணுகுமுறைதான்.

சின்னச் சின்ன விசயங்கள்: பதின் பருவத்தினருக்கு கணிக்கவேமுடியாத சின்னச் சின்ன விசயங்கள் பெரிய விளைவுகளைத் தந்து கொண்டிருக்கக் கூடும். எதிர் பாலினத்தாரின் சின்ன முகச்சுளிப்பு ஒரு மாணவரின் ஒரு நாளைக் காலி செய்துவிடுகிறது. நண்பன் முன்னால் அம்மா சொன்ன ஒரு வார்த்தை (பெரிய கேவலமாக நினைத்து) ஒரு மாணவியை நாள் முழுக்க அழ வைத்து விடுகிறது.

இயல்பா இருக்கும் போதே ஓர்அப்பா கண்காணிக்கிறார்; சந்தேகப்படுகிறார். அப்பாவின் நம்பிக்கை இல்லாத்தனத்தை தினசரி சுமக்கும் ஒரு மாணவியின் மனநிலையைப் பள்ளிக்குள் யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. மிதமிஞ்சிய அறிவுரைகளால் எரிச்சலடைந்த ஒரு மாணவரின் பகடியை நாம் ஏற்பதில்லை.

ஒரு மாணவருக்கு முகமெல்லாம் பரு. மூக்குநுனியில் புதிதாய் ஒரு பரு வந்துவிடுகிறது. சற்று வீங்கிய மூக்கோடு பள்ளிக்கூடம் வர கூச்சப் பட்டு லீவ் எடுக்கிறார். வீட்டில் திட்டுவார்கள் என பயந்து பள்ளிக்கு வெளியே சுற்றுகிறார். அவனது ஒற்றை பருவும், அச்சங்கடமும் அப்பருவக் குழப்பங்களும் நம் கண்கள் அறியாதவை.

முடி வெட்டும் கடையில் அவன்எதிர்பார்த்ததை விட கொஞ்சம் கூடுதலாய் வெட்டிவிட மூணு நாட்களாய் விடுப்பெடுத்த மாணவரோடு நாம் உரையாடாமல், அதட்டுகிறோம். அழகு பற்றிய கூடுதலான பிரஞ்ஞையுடன் நிமிர்ந்து பார்க்காமல் குனிந்து கொண்டே திரியும் மாணவரின் தடுமாற்றங்கள் நாம் பேசிக் களையாமல் நீடிக்கிறது.

முக்கியமாக மேல்நிலை வகுப்பில் இணைச் செயல்பாடுகளில் எண்ணிக்கை மிகக் மிகக் குறைவு. அதை அதிகப்படுத்த வேண்டும். விளையாட அனுமதி, கலை நிகழ்ச்சிகள், திறன் கொணர் மேடைகளை உருவாக்கித் தர வேண்டும்.

அவர்கள் நிலையிலிருந்து பதின் பருவ உணர்வுகளைப் புரிந்து கொள்ள ஆசிரியர்களும் பெற்றோரும் தயாராக வேண்டும். ஆசிரியர்களுக்குப் பயிற்சிகளும், செயல்படுத்த வகுப்பறை நடவடிக்கைக்குள் அதற்கான இடங்களையும் உருவாக்க வேண்டும். - கட்டுரையாளர் சிலேட்டுக்குச்சி, ரெட் இங்க் நூல்களின் ஆசிரியர், தேனி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x