Published : 04 Nov 2022 06:15 AM
Last Updated : 04 Nov 2022 06:15 AM

நலமாய் வாழ நடை பழகுவோம்

அருணா ஹரி

“உடலில் உறுதி உடையவரே

உலகில் இன்பம் உடையவராம்"

உடல்நலக் கோளாறை அனுபவித்த அனை வருமே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து இருப்பார்கள். சின்னஞ்சிறு குருவி போல திரிந்து பறக்க வேண்டிய வயதில் நம் சிறார்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

ஓடி விளையாட மறந்து செல்போனில் தொடு உணர் திரையை நகர்த்தி வன்முறை விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். காலில் சக்கரம் கட்டிக் கொண்டது போல வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் துரித உணவுகளும் சத்தில்லாத உணவுகளும் இடம் பிடித்து வயிற்றை குப்பைத் தொட்டி ஆக்கிவிட்டன.

உச்சி முதல் பாதம் வரை: அவற்றை வேண்டாமென்று ஒதுக்கித் தள்ள உறுதியான மனோபலம் வேண்டி இருக்கிறது. கண்ணைக் கவரும் விளம்பரங்களும், மனதை தடுமாறச் செய்யும் இலவசங்களும், சுண்டியிழுக்கும் சுவையும் தேவையற்ற உணவு வகைகளை வாங்கத் தூண்டுகின்றன. அதன் விளைவு உடற்பருமன். உடற் பயிற்சி இல்லாத வாழ்க்கை, பரபரப்பான காலத்திற்கு ஏற்ற பயனில்லாத உணவுப் பழக்கம் உடற்பருமனை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. "ஒபிசிட்டி" எனப்படும் உடற்பருமன் பலவித நோய்களுக்கு இட்டுச்செல்கிறது. ஒழுங்கில்லா உணவுப் பழக்கம், பிடித்ததை எல்லாம் அளவில்லாமல் சாப்பிடும் மனோபாவம் பருமனாகிய உடலை நோய்களின் கூடாரமாக்கி விடுகிறது. இதயம், மூளை, நுரையீரல் இவற்றுடன் எலும்புகள், மூட்டுகள், ரத்த நாளங்கள், பித்தப்பை என அத்தனை உறுப்புகளையும் பாதிக்கக் கூடியது உடற்பருமன். டைப்-2 எனப்படும் நீரிழிவுநோய் ஏற்படும். உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்குவதுடன் பக்கவாதம், மாரடைப்பு ஏற்படவும்காரணமாகிறது என எச்சரிக்கின்றனர் மருத்து வர்கள்.

கல்லீரல் செயலிழப்பு, பித்தப்பையில் கற்கள், ஸ்லீப் அப்னியா எனப்படும் தூக்கத்தில் சுவாசிப்பது தடைபடுவது, சிறுநீரகம் செயலிழப்பு போன்றபலவித நோய்களுக்கும் உடற்பருமன் காரணமாகி றது என்று மருத்துவம் சமீபகாலமாக சுட்டிக்காட்டி வருகிறது. இந்நிலையில், ஆரோக்கியமாக வாழ உடற்பருமனை தவிர்க்க வேண்டும். கட்டுப்பாடான உணவுப் பழக்கம், தவறாத நடைப்பயிற்சி உடற்பருமனையும் அதனைச் சார்ந்த பிற நோய்களையும் நம்மை அண்டவிடாது காக்கும். நடைப்பயிற்சியால் பல நன்மைகள் விளையும். காலை, மாலை இருவேளையும் நடைப்பயிற்சி மேற்கொள்வது நலம் பயக்கும். காலையில் நடைப்பயிற்சி செய்வதால் மூளையின் திறன் தூண்டப்படுகிறது. அதனால் ஞாபகசக்தி அதிகரிக்கிறது. உடலில் உள்ள அதிகமான கொழுப்புகள் கரைந்து எடை குறையும் வாய்ப்புள்ளது. மனம் புத்துணர்வு அடையும். மன அழுத்தம் ஏற்படாது. எலும்புகள் வலுப்பெறும். மூட்டு வலி வராது. மூட்டு தேய்மானம் ஏற்படாது. கொழுப்பு கரையும். இதய நோய்களும் தாக்காது. அஜீரணம் அறவே இருக்காது. முழுமையான செரிமானம் நடைபெறும். வளர்சிதை மாற்றம் சரியாக இருக்கும். நீரிழிவு நோயில் இருந்து தப்பிக்கலாம்.

விடுதலைப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி தினமும் 18 கிலோ மீட்டர் தூரம் நடந்தார். அவர் 79 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடந்து இருக்கிறார். நாம் நலமாய் வாழ வேண்டும் என்றால் கண்டிப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

"காலை மாலை உலாவி நிதம்

காற்று வாங்கி வருவோரின்

காலைத் தொட்டு கும்பிட்டு

காலன் ஓடிப் போவானே"

கட்டுரையாளர்:பள்ளி முதல்வர், எழுத்தாளர்,அன்பில், திருச்சி மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x