Last Updated : 02 Jul, 2021 01:57 PM

3  

Published : 02 Jul 2021 01:57 PM
Last Updated : 02 Jul 2021 01:57 PM

புதுவையில் அடுத்த மாதம் மருத்துவக் கல்லூரிகள் திறப்பு: ஆளுநர் தமிழிசை அறிவிப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் அடுத்த மாதத்தில் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும், அதைத்தொடர்ந்து சூழலை கண்காணித்த பிறகு இதர கல்வி நிலையங்கள் படிப்படியாகத் திறக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

புதுச்சேரி சித்தானந்தர் கோயில் வளாகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று திறந்து வைத்தார். கோயிலுக்கு வந்த ஆளுநருக்கு வரவேற்பு அளித்து, பூஜைகள் நிகழ்த்தப்பட்டன. அறையைத் திறக்கும் முன்பு பூஜைகளை ஆளுநர் செய்தார். புனித நீரைத் தெளித்து தீபத்தை ஆளுநர் காட்டினார். பூஜையில் ஆளுநர் தமிழிசையும் பங்கேற்று அறையைத் திறந்து வைத்தார்.

அதையடுத்துச் செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறும்போது, "பக்தர்கள் மனஅமைதி பெற வேண்டும் என்பதற்காகத்தான் கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. கரோனாவில் இருந்து நாம் முழுமையாக விடுபடவில்லை. கோயிலுக்கு வரும்போது கரோனா நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.

சித்தானந்தா சுவாமி கோயிலுக்கு வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்காக அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கக்கூடிய ஒரு முயற்சி. இதேபோல் எல்லா கோயில்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறையைத் திறக்க வேண்டும். தற்போது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வந்துள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே, முதல் முயற்சியாக அடுத்த மாதம் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும். அதன்பிறகு நோய் எப்படிக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து இதர கல்வி நிலையங்கள் படிப்படியாகத் திறக்கப்படும். பள்ளிகள் திறப்பு பற்றி, பெற்றோரிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x