Published : 03 Jun 2021 05:11 PM
Last Updated : 03 Jun 2021 05:11 PM
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தற்போது வரை உ.பி., மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்கள் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளன.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தொற்றுப் பரவல் முழுவதும் குறையாத சூழலில், பிரதமர் மோடி ஜூன் 1-ம் தேதி மாலை மத்திய அமைச்சர்கள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்த அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தின் முடிவில் நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் அறிவித்தார்.
எனினும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு விமர்சனமும் கிளம்பி வருகிறது. பொதுத் தேர்வை ரத்து செய்த மத்திய அரசு, நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்தலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது தொடர்பாகக் கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கருத்து கேட்கப்படும். இரண்டு நாட்களுக்குள் கருத்துகேட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
இந்நிலையில் குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்தன. அதைத் தொடர்ந்து, உத்தராகாண்ட் மாநிலமும் தங்கள் கல்வி வாரியத்தில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்தது. மேலும் ராஜஸ்தான், கோவா ஆகிய மாநிலங்களும் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தன.
அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும் பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளன. மதிப்பெண் மதிப்பீட்டு முறை பிறகு அறிவிக்கப்படும் என்றும் அந்த மாநிலங்கள் அறிவித்துள்ளன.
தேர்வுகளை ரத்து செய்த மாநிலங்களில், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்கள் அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment