Published : 16 May 2021 11:45 AM
Last Updated : 16 May 2021 11:45 AM

புதிய கல்விக் கொள்கை அமலாக்கம்; மத்திய அரசுடன் மாநிலக் கல்வி அமைச்சர் விவாதிப்பதே சரி- தமிழக அரசு கடிதம்

புதிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்த மத்தியக் கல்வி அமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித் துறைச் செயலருக்குப் பதிலாக மாநிலக் கல்வி அமைச்சர் விவாதிப்பதே ஏற்புடையதாக இருக்கும் என்று தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த ‘தேசிய கல்விக் கொள்கை- 2020’-க்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல்அளித்தது. கரோனா பரவல் சூழல் கருதி 2021-ம் ஆண்டுக்குள் கல்விக் கொள்கையை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் கல்விக்கொள்கையின் சாராம்சங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே நாடு முழுவதும் கரோனா தீவிரம் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு இணையதள வழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் புதிய கல்விக்கொள்கையை அமல் செய்வது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் காணொலிக் காட்சி வழியாக நாளை (மே.17) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலக் கல்வித் துறைச் செயலர்களும் பங்கேற்பார்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் கல்வித் துறைச் செயலருக்குப் பதிலாக மாநிலக் கல்வி அமைச்சர் விவாதிப்பதே ஏற்புடையதாக இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’மத்திய கல்வி அமைச்சர் அனைத்து மாநிலங்களின் கல்வித் துறைச் செயலாளர்கள் கூட்டம் வாயிலாக கோவிட் நோய்த் தொற்றுக் காலத்தில் கல்வி அமைப்பு மேலாண்மை, பள்ளிகளில் இணைய வழிக் கல்வியைத் தொடர்வதற்கான வழிமுறைகள், புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்துதலின் நிலை போன்றவை குறித்து மே 17ஆம் தேதி உரையாட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அமைச்சர், மத்தியக் கல்வி அமைச்சருக்கு நேற்று (மே.15) எழுதியுள்ள கடிதத்தில் ’இந்த கலந்துரையாடல் கூட்டத்தை, தமிழ்நாடு அரசின் கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும். அக்கூட்டத்தில் மாநில அரசின் சார்பாக மிக முக்கியமான பொருண்மைகளான புதிய தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்துதலின் நிலை போன்றவற்றின் மீதான கருத்துகளையும் பரிந்துரைகளையும் தெரிவிக்க நான் தயாராக உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்’’.

இவ்வாறு மாநிலக் கல்வித்துறை அமைச்சர் சார்பில் மத்தியக் கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்குத் தற்போதைய திமுக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x