பாலிடெக்னிக் இறுதி ஆண்டு பருவத் தேர்வு: வீட்டிலிருந்தே எழுத தயாராக இருக்க அறிவுறுத்தல்

பாலிடெக்னிக் இறுதி ஆண்டு பருவத் தேர்வு: வீட்டிலிருந்தே எழுத தயாராக இருக்க அறிவுறுத்தல்
Updated on
1 min read

பாலிடெக்னிக் மாணவர்கள் இறுதி ஆண்டு பருவத் தேர்வை வீட்டிலிருந்து எழுத தயாராக இருக்கவேண்டும் என கல்லூரிகள் அறிவுறுத்தியுள்ளன.

தமிழகத்தில் கரோனா தொற்று அச்சம் காரணமாக உயர்கல்வியில் 1, 2, 3-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கு பருவத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், கடந்த கல்வி ஆண்டின் ஏப்ரல் - மே பருவத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களும் (அரியர் பாடங்கள் உட்பட) தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இறுதி ஆண்டு மாணவர்கள் பருவத் தேர்வுகளை கட்டாயம் எழுத வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு செப்.30-ம் தேதிக்குள் பருவத் தேர்வு நடத்த பல்கலைக்கழக மானியக் குழு கல்வி நிறுவனங்களை அறிவுறித்தியிருந்தது. இதனால், பொறியியல், கலை அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்த உயர்கல்வித் துறை ஆலோசனை செய்து வருகிறது.

இந்நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் சார்பாக மாணவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

மூன்றாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்கள் தாங்கள் எழுத வேண்டிய எழுத்து, செய்முறை, திட்ட கட்டுரை என அனைத்து தேர்வுகளையும் இணையவழியில் வீட்டிலிருந்தே எழுத அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதிகள், நேர அட்டவணை, வினாத்தாள் பதிவிறக்கம், தேர்வு எழுதும் முறை, தேர்வு தாளை திரும்ப சமர்ப்பிக்கும் முறை ஆகியவை குறித்து விரைவில் தகவல் வெளியிடப்படும். மாணவர்கள் இணையவழியில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்வு எழுதி, தேர்வுத் தாளை சமர்ப்பிக்க ஏதுவாக தங்களை தயார்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த இறுதி ஆண்டு இணையவழி பருவத் தேர்வை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் மாணவர்கள் எழுதவுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in