Published : 18 Mar 2025 06:08 AM
Last Updated : 18 Mar 2025 06:08 AM

உண்மையான விடையும் சரியான விடையும்! | வகுப்பறை புதிது 11

உங்கள் பள்ளிகளில் நீங்கள் நடத்தும் ஒவ்வொரு தேர்வும் ஒரு பெரிய நாடகம் என்பதை மாணவர்கள் நன்கு அறிவார்கள். சரியான விடையை அவர்கள் எழுதுகிறார்கள், உண்மையான விடையோ உங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது. - ரெஃப் எஸ்க்வித்

குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கான நோக்கத்தை அறிய உலக அளவில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல வேலைக்குச் செல்ல அவர்களை வழிநடத்தும் இடமே பள்ளி என்பது பெரும்பாலான பெற்றோர்களின் பதில். குழந்தைகளோ பள்ளிக்கூடம் போவதன் நோக்கம் தேர்வு எழுதுவதும், மதிப்பெண் பெறுவதும்தான் என்று சொல்லிவிட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்வுகளே இப்போது பள்ளிக்கூடங்களின் அடையாளமாக ஆகிவிட்டது என்பது ரெஃப் எஸ்க்வித்தின் ஆதங்கம்.

உங்கள் தலைமுடியில் தீப்பற்றும்வரை கற்பித்தலில் ஈடுபடுங்கள் எனும் அர்த்தத்தில் வெளிவந்த அவருடைய புத்தகம் பிரபலமானது. அந்தப் புத்தகம் தேர்வுகளின் அடிப்படைகளை அடுக்கும்போது எவ்வளவு முட்டாள்தனமாக, நகைப்புக்கு இடமாக நம் தேர்வுகள் உள்ளன என்பதை உணர முடிந்தது.

தேர்வு என்பதைப் பள்ளிக்கல்வியில் இருந்து நீக்கிவிட்டால் பள்ளிகளுக்கு நோக்கம் இல்லாமல் சிதைந்து போகும் என்கிறார் நூலாசிரியர். மாணவர்களைப் படிப்படி என்று சமூகத்திலும் வீட்டிலும் பள்ளியிலும் மிரட்டுவதற்குப் பயன்படுகிற மிகப்பெரிய முரட்டு ஆயுதமாகத் தேர்வு எனும் சொல் விளங்குகிறது.

விதவிதமான தேர்வுகள்!

புத்தகத்தின் ஆறாவது அத்தியாயத்தில், 217 வகையான தேர்வுகள் உலகெங்கிலும் நடத்தப்படுவதாக அவர் தெரிவிக்கும்போது மலைப்பாக இருக்கிறது. வகுப்புத் தேர்வு, சொல்வதை எழுதும் தேர்வு, வாரத் தேர்வு, மாதாந்திரத் தேர்வு, காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, ஒரு பக்கத் தேர்வு, ஒரு வரி வினாத் தேர்வு...இப்படி அவர் அடுக்கிக்கொண்டே போகிறார். நாம் புதிதாக நடத்திவரும் விதவிதமான நுழைவுத் தேர்வுகளையும் சேர்த்தால் இன்னும் தேர்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

இந்தத் தேர்வுகளின் மிகப்பெரிய பலவீனம், தேர்வு எழுதும் அனைவரும் ஒரே விடையை எழுத வேண்டும் என்பதாகும். தேர்வு நடத்துவதிலும், மதிப்பிடுவதிலும் முரணற்று சீராக இருக்க வேண்டும் என்று இந்த உலகம் எதிர்பார்க்கிறது.

இந்தத் தேர்வுகளில் யார் தேர்ச்சி பெறுவார்கள், தோல்வியுறுவார்கள் என்பதைத் தீர்மானிக்கத் திருத்துபவருக்கு ‘கி’ என்றழைக்கப்படும் விடைத்தாள் குறிப்புகள் வழங்கப்படுகின்றன. அந்த விடை குறிப்புகள் வகுப்பறை தேர்வுகளின்போது மீண்டும் மீண்டும் ஒத்திகை பார்க்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு தேர்வும் ஒரு நாடகம்தான் என்பது நூல் ஆசிரியரின் தாழ்மையான கருத்து.

உலகின் தலைசிறந்த தலைவர் யார் என்கிற கேள்வி கேட்கப்படுகிறது என்றால், ஒரே பதிலை எதிர்பார்ப்பது நியாயமா என்கிற கேள்வியை நூலாசிரியர் எழுப்புகிறார். கறுப்பின குழந்தைக்கு மண்டேலா உண்மையான பதிலாக இருக்கலாம், இந்தியக் குழந்தைக்குக் காந்தியடிகள் உண்மையான பதிலாக இருக்கலாம், சீனக் குழந்தைக்கு மாவோ உண்மையான பதிலாக இருக்கலாம்.

ஆனால், பாடப்புத்தகத்தின் வினைக்குறிப்பில் ஆபிரகாம் லிங்கன் என்றோ, வேறொருவரின் பெயரோ இருந்தால் அதுவே சரியான விடையாகக் கருதப்படும், அதைதான் பதிலாக எழுத வேண்டும் என்று அந்தக் குழந்தைக்கு மீண்டும் மீண்டும் கற்பிக்கப்பட்டு அதன் மனத்தில் பதியம் போடப்படுகிறது.

இங்கே மதிப்பெண்தான் முக்கியம். அதுதான் உண்மையான விடைக்கும் சரியான விடைக்கும் இடையில் உள்ள வேறுபாடு. தேர்வு மைய சமூகத்தில் உண்மையான விடைகளை விடச் சரியான விடைகளுக்கு மதிப்பு அதிகம் என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது அல்லவா.

- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x