Published : 17 Sep 2024 06:20 AM
Last Updated : 17 Sep 2024 06:20 AM

புதுமை புகுத்து 34: ஒன்பது நாட்கள் உலகை உலுக்கிய ராட்சச சுனாமி

வயலினை இசைக்கும்போது எல்லா கம்பிகளும் தூண்டப்பட்டு அதிரும். வெளிப்படும் அதிர்வலைகள் பல்வேறு அதிர்வெண் கலவையாக இருக்கும். நிலநடுக்க அதிர்வுகளும் எப்போதும் பல்வேறு அதிர்வெண் அலைகளின் கலவையாக இருக்கும். அதுவே வயலினில் ஒரே ஒரு கம்பியை மட்டும் தூண்டினால் ஒரே ஒரு அதிர்வெண் அதிர்வுகள் வெளிப்படும். அதுபோல கடந்த 2023 செப்டம்பர் 16-ல் உலகம் முழுவதும் உள்ள பல நில அதிர்வு நிலையங்களில் பதிவாகிய அதிர்வு அலைகள் ஒரே ஒரு அதிர்வெண் கொண்டு அமைந்ததைக் கண்டு விஞ்ஞானிகள் திகைத்து நின்றனர்.

பூகம்பங்கள் அரிதானவை அல்ல. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவில் 2023-ல் மட்டும், உலகம் முழுவதும் 1712 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இருப்பினும், ஆர்க்டிக் முதல் அண்டார்டிகா வரை பதிவாகிய இந்த மர்ம அதிர்வு அலைகள் புதிராக இருந்தன; இவை நிலநடுக்க அதிர்வுகளை ஒத்து இருக்கவில்லை. மேலும் அதிர்வுகள் ஒன்பது நாட்கள் நீடித்தன. 15 நாடுகளைச் சேர்ந்த 40 ஆய்வு மையங்களில் பணிபுரியும் 68 ஆய்வாளர்கள் இந்த மர்ம அதிர்வுகளை ஆய்வு செய்தனர். கிரின்லாந்து தீவில் உள்ள டிக்சன் ஃபிஜோர்ட் நீர் நிலையில் ஏற்பட்ட ராட்சச சுனாமியின் விளைவாக ஏற்பட்ட அதிர்வு என கண்டுபிடித்தனர்.

சமீபத்தில் வெளியான சைன்ஸ் ஆய்விதழில் இதுகுறித்த ஆய்வுக் கட்டுரை பிரசுரமானது. குறுக்கு வெட்டு புதிரில் துண்டுகளை இணைத்து மொத்த காட்சியைப் பெறுவதுபோலப் பல்வேறு தரவுகளைச்சேகரித்து கணித சிமுலேஷன் வழியே நிகழ்ந்த சம்பவத்தை இனம் கண்டனர். ஃபிஜோர்ட் நீர் நிலையில் பொருத்தப்பட்டிருந்த நீர் அளவை மானி, ராணுவ ரகசியமாக இருந்த நீர் நிலையின் தரைப்பகுதி வரைபடம் போன்ற பல்வேறு தரவுகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.

நடந்தது என்ன? - பனி ஆறு பாய்ந்து கடல் மட்டத்திற்குக் கீழே உள்ள ஒரு பள்ளத்தாக்கை அரித்து உருவான புவியியல் அமைப்புதான் ஃபிஜோர்ட். இரண்டு பக்கமும் சரிவான கல் பனி கலந்த முகடுகளைக் கரையாகக் கொண்ட ஆங்கில எழுத்து ‘யூ’ (U) போன்ற வடிவில் நிலப்பகுதிக்கு உட்புறமாக நன்கு நீண்டிருக்கும் நீர் நிலையாகக் காட்சி தரும். டிக்சன் ஃபிஜோர்ட் நீர் நிலையிலிருந்து 1.2 கிமீ தொலைவில் உள்ள விடெ ஸ்டொஎவ்ஹொர்ன் ( Hvide Stvhorn) எனும் மலைமுகட்டில் ஏற்றப்பட்ட நிலச்சரிவின் தொடர்ச்சியாகக் கற்களும் பனியும் கீழ் நோக்கி உருண்டு வந்தன.

அதன் மோதலில் கீழே இருந்த பனியாறு சிதறி மேலும் பொருட்கள் கீழ் நோக்கி சரிய தொடங்கின. இதனால் 25 மில்லியன் கனமீட்டர் அளவு பொருட்கள் திரண்டு நீரில் விழுந்தன. பத்தாயிரம் நீச்சல் குளங்களை நிரப்பும் அளவுக்குப் பொருட்கள் நீரில் விழுந்ததன் விளைவாக 200 மீட்டர் உயர சுனாமி அலைகள் ஏற்பட்டது.

திருச்சி ரங்க கோவிலின் கோபுரத்தைப் போல மூன்று மடங்கு உயரமான இந்த அலைகள் நீர்நிலையின் எதிர் புறம் சென்று கரையில் மோதித் திரும்பின. திரும்பிய அலையின் உயரம் 110 மீட்டராக இருந்தது. சுனாமி தொடங்கி ஐந்து நிமிடத்தில் அலையின் உயரம் ஏழு மீட்டராக குறைந்தது.

எனினும் கையில் பக்கெட் நீரை எடுத்துச் செல்லும்போதும் அங்கும் இங்கும் நீரில் அலைகள் மோதி திரும்புவதுபோல குறுகிய அந்த நீர் நிலையில் பத்தாயிரம் தடவை அலைகள் எதிர் எதிர் கரையில் மோதி திரும்பின. ஒன்பது நாட்கள் தொடர்ந்து எதிர் எதிர் கரையில் பட்டுத் திரும்பி அலை மோதியது.

அபாய சங்கு: இந்த சுனாமி அலைகள் ஏற்படுத்திய அதிர்வுகள்தான் உலகம் முழுவதும் பரவின. ராட்சச அலை ஏற்பட்ட போது மணி அடித்தது போலவும், பின்னர் மணியின் ரீங்காரம் போலவும் இந்த அதிர்வுகள் உருவாயின என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த மணியோசை நமக்கு நேரவிருக்கும் அபாயம் குறித்த எச்சரிக்கை எனவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஏன் அந்த மலைமுகட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது? காலநிலை மாற்றத்தின் தொடர்ச்சியாகப் புவி வெப்பம் அடைந்து கூடுதல் வேகத்தில் அந்த பகுதியில் பனி உருகுகிறது. முகட்டிலிருந்த பாறைகளுக்கு அடியிலிருந்த பனிதான் அதுவரை தாங்கி பிடித்த படி இருந்தது. மெல்ல மெல்லக் கீழே உள்ள பனி உருகி மெலிந்தது. எனவே தான் நிலச்சரிவும் அதைத் தொடர்ந்து ராட்சச சுனாமியும் ஏற்பட்டது. காலநிலை மாற்றத்தின் தொடர்ச்சியாக இதுபோன்ற நிகழ்வுகள் இனி அதிகம் நிகழக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி; தொடர்புக்கு: wtvv123@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x