Last Updated : 12 May, 2023 06:24 AM

 

Published : 12 May 2023 06:24 AM
Last Updated : 12 May 2023 06:24 AM

கொல்லிமலையில் கோடை விழா நடத்த வேண்டும்: சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தல்

கொல்லிமலை மாசிலா அருவி. (கோப்பு படம்)

நாமக்கல்: கொல்லிமலை சுற்றுலாத் தலத்தில் கோடை விழா நடத்த வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய மூன்று மாவட்ட எல்லையில் மூலிகை வளம் நிறைந்த கொல்லிமலை சுற்றுலாத் தலம் உள்ளது. இங்கு தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் வந்து செல்கின்றனர். குறிப்பாகக் கோடை காலத்தில் பயணிகள் வருகை அதிகம் இருக்கும்.

ஆகாய கங்கை அருவி: இங்குள்ள ஆகாய கங்கை அருவி சுமார் 160 அடி உயரத்திலிருந்து கொட்டுகிறது. இந்த அருவிக்கு 1,050 படிக்கட்டுகள் வழியாக இறங்கிச் செல்லும் போது, பயணிகளுக்குப் பலவிதமான திகிலூட்டும் அனுபவங்கள் கிடைக்கும்.

மேலும், அறப்பளீஸ்வரர் கோயில் அருகே சிறிய அருவியும், மலையின் வெவ்வேறு இடங்களில் நம் அருவி, மாசிலா அருவியும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும்.

தாவரவியல் பூங்கா: தாவரவியல் பூங்கா, வாசலுார்பட்டி படகு இல்லம், சீக்குப்பாறை ஆகிய இடங்களும் சிறுவர்களையும் மகிழ்விக்கும். மலையின் மறுபுறம் திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை சுற்றுலாத் தலம் உள்ளது.

கொல்லிமலை அடிவாரம் தொடங்கி மலை உச்சி வரை 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதுபோன்ற அதிக கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலை தமிழகத்தில் வேறு இல்லை.

இத்தனை சிறப்புகள் நிறைந்த கொல்லிமலையில் பயணிகளை மகிழ்விக்க கோடை விழா நடத்த வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வர்த்தகம் அதிகரிக்கும்: இதுதொடர்பாக சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது: கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆடி மாதம் இப்பகுதியை ஆட்சி செய்த ஓரி மன்னனுக்கு இரு நாட்கள் அரசு சார்பில் விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவில், கொல்லிமலை சுற்று வட்டார பகுதி மக்களே அதிகம் கலந்து கொள்கின்றனர்.

கோடை விடுமுறையான மே மாதத்தில் கோடை விழா நடத்தினால் பயணிகளை மகிழ்விக்கும். மேலும், இங்கு வர்த்தகத்துக்கும் வாய்ப்பு ஏற்படும். எனவே, கோடை விழா நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x