Published : 30 Apr 2023 07:47 PM
Last Updated : 30 Apr 2023 07:47 PM

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: குப்பனூர் - ஏற்காடு சாலையில் வாகன நெரிசல்

ஏற்காடு செல்லும் குப்பனூர்- ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்

சேலம்: கோடை விடுமுறை காரணமாகவும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதன் காரணமாகவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இன்று(ஞாயிறு) ஏற்காட்டில் குவிந்தனர்.

தமிழகத்தில், ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகவும் சில மாவட்டங்களில் 105 டிகிரிக்கு அதிகமாகவும் வெயில் சுட்டெரித்தது. இதனிடையே, பள்ளி, கல்லூரிகளுக்குத் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், வெயிலுக்கு இதமாக குளுமையான சுற்றுத்தலங்களுக்கு சென்று வர மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்கு கடந்த வாரத்தில் இருந்தே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், ஏற்காட்டுக்கு செல்வதற்காகன முக்கிய சாலையான, சேலம் அடிவாரம் - ஏற்காடு மலைப்பாதையில், பராமரிப்பு பணி தொடங்கப்பட்டதால், அதில் 4 சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்காடு சுற்றுலா வரும் வாகனங்கள், அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த குப்பனூர் - ஏற்காடு மலைப்பாதை வழியாக, ஏற்காடு வந்து செல்கின்றன. இந்நிலையில், கோடை விடுமுறை, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை காரணமாக ஏற்காட்டுக்கு இன்று சுற்றுலாப் பயணிகளின் வருகை மிக அதிகமாக இருந்தது.

ஏற்காடு படகு இல்லத்தில் குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள்

தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏற்காட்டுக்கு சுற்றலாப் பயணிகள் வருகை தந்தனர். சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் குப்பனூர்- ஏற்காடு மலைப்பாதை வழியாகவே வந்து செல்ல வேண்டியுள்ளதால், அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இரு சக்கர வாகனங்களிலும் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர்.

இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், "ஒவ்வொரு கோடை விடுமுறையின்போதும் ஏற்காடு வந்து செல்கிறோம். ஏற்காடு வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, இங்கு வந்து செல்வதற்கான சாலையை, கோடை விடுமுறைக்கு முன்னரே சீரமைத்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குப்பனூர் சாலை குறுகியதாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே, சேலம் அடிவாரம் - ஏற்காடு சாலை சிரமைப்புப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்" என்றனர்.

இதனிடையே, ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், ஏரி பூங்கா, லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், கரடியூர் காட்சி முனைப்பகுதி, சேர்வராயன் கோயில் உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏற்காடு படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் பலர், ஏரியில் படகு சவாரி செய்வதற்காக, நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

ஏற்காட்டில் குவிந்து கொண்டே இருக்கும் சுற்றுலாப் பயணிகளால், அங்குள்ள தங்கும் விடுதிகள் நிரம்பிவிட்டதால், பலரும் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்தனர். இதனிடையே, ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக மழை பெய்வதால், அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவுவதும், அவ்வப்போது சாரல் மழை பெய்வதும், சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் உற்சாகத்தை அளித்து வருகிறது. மே தின விடுமுறை என்பதால், ஏற்காட்டுக்கு சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை நாளையும் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x