Published : 22 Mar 2025 06:44 PM
Last Updated : 22 Mar 2025 06:44 PM

உதகை - குன்னூர் சிறப்பு மலை ரயில்கள் மார்ச் 28 முதல் ஜூலை 7 வரை இயக்கம்

உதகை: கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக, உதகை - குன்னூர் மற்றும் உதகை - கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் சேவை வரும் 28-ம் தேதி முதல் ஜூலை மாதம் 7-ம் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: சுற்றுலா பயணிகள் வசதிக்காக கோடை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குன்னூர் முதல் உதகை வரையில் இம்மாதம் 28-ம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.

குன்னூர் முதல் உதகை வரை 5 பெட்டிகளுடன் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும். குன்னூர் முதல் உதகை வரையில் மொத்தம் 210 இருக்கைகளில் 80 இருக்கைகள் முதல் வகுப்பும், 130 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் இருக்கும். குன்னூரிலிருந்து காலை 8.20 புறப்படும் ரயில் காலை 9.40 மணிக்கு உதகை வந்தடையும், மாலை 4.45 மணிக்கு குன்னூரிலிருந்து புறப்படும் ரயில் மாலை 5.55 மணிக்கு உதகை வந்தடையும்.

உதகை முதல் கேத்தி வரையிலான சிறப்பு ரயில் வாரம் நான்கு நாட்கள் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் இயக்கப்படும். 210 இருக்கைகளில் முதல் வகுப்பு 80 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பு 130 இருக்கைகள் இருக்கும். இந்த ரயில் உதகை ரயில் நிலையத்திலிருந்து 6 முறை கேத்திக்கு இயக்கப்படும். காலை 9.45, 11, 11.30 மணி மதியம் 1.10, 3 மணி மற்றும் மாலை 4.30க்கு கேத்திக்கு இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x