Published : 01 Oct 2024 12:45 PM
Last Updated : 01 Oct 2024 12:45 PM

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு: சுற்றுலா பயணிகளுக்கு ஆட்சியரின் வேண்டுகோள்

உதகை: நீலகிரி மாவட்டத்துக்கு வர இ-பாஸ் நடைமுறையை நீதிமன்றம் நீடித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் இ-பாஸ் நடைமுறையை பின்பற்றி வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (அக்.1) கூறியதாவது: “சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்‌ படி நீலகிரி மாவட்டத்துக்கு பிற மாநிலங்கள்‌ மற்றும்‌ மாவட்டங்களிலிருந்து வாகனங்கள்‌ மூலம்‌ வரும் சுற்றுலா பயணிகள்‌ கடந்த மே மாதம் 7-ம் தேதி முதல்‌ இ-பாஸ்‌ பயன்படுத்தி நீலகிரி மாவட்டத்துக்குள்‌ நுழைய உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.

இதனால், நேற்று (செப்.30) வரை இ-பாஸ்‌ முறை நடைமுறையில்‌ இருந்து வந்தது. இந்நிலையில்‌, சென்னை உயர்நீதி மன்றத்தால்‌ மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்‌ வரை இ-பாஸ்‌ நடைமுறையை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, நீலகிரி மாவட்டத்துக்குள்‌ வரும்‌ அனைத்து சுற்றுலா பயணிகளும்‌ ஏற்கனவே நடைமுறையில்‌ உள்ளவாறு www.epass.tnega.org என்ற இணையதளம்‌ மூலம்‌ இ-பாஸ்‌ பெற்று நீலகிரி மாவட்டத்திற்குள்‌ வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நீலகிரி மாவட்டத்தில்‌ வசிக்கும் பொது மக்கள்‌, நீலகிரி மாவட்ட பதிவு எண்‌ டிஎன் 43 பெற்றிருந்தால்‌ அந்த வாகனங்களுக்கு இ-பாஸ்‌ தேவையில்லை. மாவட்ட எல்லையில்‌ அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில்‌ இ-பாஸ் சரிபார்ப்பு பணிக்காக வாகனங்களை நிறுத்தி சரிபார்ப்புக்கு பிறகு நீலகிரி மாவட்டத்துக்குள்‌ நுழைய வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு உரிய ஒத்துழைப்பை பொது மக்கள்‌ மற்றும்‌ சுற்றுலா பயணிகள்‌ அளிக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x