Last Updated : 18 Jun, 2024 08:59 PM

 

Published : 18 Jun 2024 08:59 PM
Last Updated : 18 Jun 2024 08:59 PM

குமரியில் விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் பொருத்தும் பணி துவக்கம்

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழை கூண்டு இணைப்பு பாலத்திற்கு கண்ணாடி கூண்டு பொருத்துவதற்கான முதற்கட்ட பணி துவங்கியுள்ளது.

நாகர்கோவில்: கன்னியாகுமரி கடல் நடுவே விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழை இணைப்பு கூண்டு பாலத்திற்கான கூண்டு கம்பிகள் பொருத்தும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் இணைப்பு கூண்டு பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. இந்தக் கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப் படுகிறது. இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது கடல் அலையை பார்த்து ரசிக்கும் வண்ணமாக வெளி நாடுகளில் அமைக்கப்பட்டு உள்ளது போல கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்பட உள்ளது.

இந்த பாலத்துக்கான கட்டுமான பணிகள் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மறுபுறம் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையிலும் கண்ணாடி கூண்டு இணைப்பு பாலத்துக்கான பில்லர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. மேலும், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கு இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைப்பதற்காக நடுக்கடலில் 6 ராட்சத தூண்கள் அமைக்கும் பணியும் நடைபெற்றது.

விவேகானந்தர் பாறை அமைந்துள்ள கடல் பகுதியில் 3 ராட்சத தூண்களும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள கடல் பகுதியில் 3 ராட்சத தூண்களும் அமைக்கும் பணி நடந்தது. கடல் நடுவில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத தூண்கள் தலா 27 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் அமைக்கப்பட்டுள்ள தூண்கள் கடல் உப்புக் காற்றால் பாதிக்காத வகையில் ரசாயன கலவை கலந்த சிமென்ட் காங்கிரீட் அமைக்கப் பட்டுள்ளது.

தற்போது திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் பாலத்தை இணைக்கும் வகையில் தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதை தொடர்ந்து புதுவையில் கண்ணாடி இழை இணைப்பு பாலத்துக்கான கூண்டு முதல்தர ஸ்டீல் கம்பிகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கூண்டு மொத்தம் 222 டன் எடை கொண்டதாகும். கடல் உப்புக் காற்றால் துருப்பிடிக்காத வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் இவை வடிவமைக்கப் பட்டுள்ளது.

மொத்தம் 101 பாகங்களாக இந்த கூண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த கூண்டு தனித் தனியாக பிரிக்கப்பட்டு கன்னியாகுமரிக்கு விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. விவேகானந்தர் மண்டபத்துக்கும். திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள ராட்சத தூண்கள் மீது இந்த 101 பாகங்களும் இணைக்கப்பட்டு கூண்டு பொருத்தப்பட உள்ளது. கூண்டை நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த பொறியியல் வல்லுனர் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் கண்ணாடி இழை கூண்டு ஆர்ச்சை தூக்கி வைத்து இணைப்பதற்காக திருவள்ளுவர் சிலையில் ராட்சத கிரேன் நிறுவப்பட்டுள்ளது. கண்ணாடி இழைக் கூண்டுகளை அமைப்பதற்காக பூர்வாங்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்ததும் புதுவையில் வடிவமைக்கப்பட்ட ஆர்ச், கண்டெய்னர் லாரிகள் மூலம் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட உள்ளது. பின்னர் இவை விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பொருத்தப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x