Last Updated : 18 Jun, 2024 07:54 PM

 

Published : 18 Jun 2024 07:54 PM
Last Updated : 18 Jun 2024 07:54 PM

சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுக்க கொடைக்கானல் மலைச் சாலையில் ரோலர் கிராஸ் பேரிகாடுகள்!

கொடைக்கானல்: கொடைக்கானலில் வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மலைச்சாலையில் ரூ.8 கோடியில் 22 இடங்களில் "ரோலர் கிராஸ் பேரிகாடுகள்" அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு செல்ல வத்தலக் குண்டு மற்றும் பழநி வழியாக இரு வழிகள் உள்ளன. கொடைக்கானலுக்கு செல்லும் மலைப் பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலைகளில் ஏராளமான அபாயகரமான வளைவுகள், பள்ளத்தாக்குகள் நிறைந்துள்ளன. ஆபத்து நிறைந்த இந்த மலைச் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதில், பலர் உயிரிழந்துள்ளனர்.

மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைப் பாதையில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க ரோலர் கிராஸ் பேரிகாடுகள் அமைக்கப்படுகின்றன. முதல்கட்டமாக ரூ.8 கோடியில் கொடைக்கானல் நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட பகுதியில் 12 இடங்கள், பழநி நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட பகுதியில் 10 இடங்கள் என மொத்தம் 22 இடங்களில் இவ்ற்றை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அபாயகரமான வளைவுகள், அதிக விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து 600 முதல் 800 மீட்டர் தூரத்துக்கு "ரோலர் கிராஸ் பேரிகாடுகள்" அமைக்கப்படுகின்றன. மலைச்சாலையில் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்லும் நிலை வந்தால் "ரோலர் கிராஸ் பேரிகாடுகள்" எனும் புதிய வகை தடுப்பில் மோதி அந்த வாகனம் ரோலரில் சுற்றிக் கொண்டு மீண்டும் சாலைக்கே வந்து விடும். இதனால், விபத்தில் வாகனங்களுக்கு சேதம் அதிகம் ஏற்படாது. பயணிகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பிக்க முடியும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x