Published : 04 Aug 2023 03:00 PM
Last Updated : 04 Aug 2023 03:00 PM

வால்பாறையில் முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட படகு இல்லம்

வால்பாறை படகு இல்லம். (கோப்பு படம்)

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஆட்சியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட படகு இல்லம் முன்னறிவிப்பின்றி தற்போது மூடப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வால்பாறையை சேர்ந்த சரவணன் என்ற வாசகர்,‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘உங்கள் குரல்’ தொலைபேசி பதிவில் கூறியிருப்பதாவது: வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, வால்பாறை நகராட்சி சார்பில் படகு இல்லம் கட்டப்பட்டது. ஆனால் பணிகள் முழுமை அடையாத நிலையில் அவசர அவசரமாக படகு இல்லம் திறக்கப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் படகு இல்லப் பணிகளை நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. படகு இல்லத்தை அழகுபடுத்தும் பணியும் கைவிடப்பட்டது. ஓராண்டுக்கு மேலாக படகு இல்லப் பணிகள் எதுவும் நடைபெறாததால், சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், கடந்த மே மாதம் வால்பாறையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடைபெற்றது. அதற்காக அவசர அவசரமாக படகு இல்லம் அழகு படுத்தப்பட்டு, படகு சவாரியும் தொடங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் 3 நாட்கள் நடைபெற்ற கோடை விழா நிறைவடைந்ததும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க விரைவில் படகு இல்லத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x