Published : 20 Nov 2021 03:06 AM
Last Updated : 20 Nov 2021 03:06 AM

திண்டுக்கல்லில் - நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை : கல்லூரி தாளாளரை கைது செய்ய கோரி மறியல்

திண்டுக்கல் அருகே பாலியல் தொல்லை கொடுக்கும் தனியார் நர்சிங் கல்லூரித் தாளாளரைக் கைது செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் - பழநி சாலையில் மாணவிகள் மறியல் செய்தனர்.

திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டி கிராமத்தில் தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது.இங்கு படிக்கும் மாணவிகள், பாலியல்தொல்லை கொடுக்கும் கல்லூரித் தாளாளர்ஜோதிமுருகனை கைது செய்ய கோரி திண்டுக்கல் - பழநி சாலையில் நேற்று மறியல் செய்தனர். ஜோதிமுருகன் கடந்த மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டார். மேலும் சினிமா தயாரிப்ப்பாளராகவும் உள்ளார்.

தகவலறிந்த திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் சென்று மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கல்லூரித் தாளாளரை கைது செய்யும் வரை போராட்டம் நீடிக்கும் எனக் கூறி மாணவிகள் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல் - பழநி சாலையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் காத்திருந்தன.

பாலியல் புகாருக்கு உள்ளானவர்கள் இரவுக்குள் கைது செய்யப்படுவர் என திண்டுக்கல் எஸ்பி உறுதி அளித்ததையடுத்து, மாணவிகள் சாலை மறியலை கைவிட்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவியிடம் புகாரைப் பெற்ற தாடிக்கொம்பு போலீஸார் விசாரணையை தொடங்கினர். கல்லூரித் தாளாளர் ஜோதிமுருகன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் விடுதிக் காப்பாளர் அர்ச்சனா என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார் அர்ச்சனாவை கைது செய்தனர். இந்நிலையில் கல்லூரித் தாளாளர் ஜோதிமுருகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x