Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM

கூடுவாஞ்சேரி அருகே சித்த மருத்துவர் வீட்டில் 110 பவுன் கொள்ளை

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியை அடுத்த கன்னிவாக்கத்தைச் சேர்ந்தவர் செந்தாமரை. இவரது மகன் சித்த மருத்துவர் நந்தகுமார், வீட்டிலேயே கிளினிக் நடத்தி வருகிறார். தந்தையும் மகனும் ஒரே வீட்டில் முதல் தளத்திலும் கீழ்தளத்திலும் வசிக்கின்றனர்.

செந்தாமரையும் நந்தகுமாரும் வீட்டை பூட்டிவிட்டு வெவ்வேறு குடும்ப விழாக்களுக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை செந்தாமரை வீடு திரும்பியபோது, கீழ்தளம் மற்றும் முதல் தளத்தில் உள்ள வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது நந்தகுமாரின் வீட்டில் 100 பவுன் நகைகளும், செந்தாமரை வீட்டில் 10 பவுனும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

தகவலறிந்த கூடுவாஞ்சேரி போலீஸார் சம்பவஇடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். மர்ம நபர்களின் கைரேகைகளை, கைரேகை நிபுணர்கள் பதிவுசெய்தனர்.

இதுபற்றி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x