Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM

மணல் கடத்தலை தடுப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்பான முறையில் அமல்படுத்த வேண்டும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

மதுரை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டத்தில் நெறிஞ்சிக்குடி, சேரனூர், சித்தூர், கூடலூர், காரசூரம்பட்டி கிராம மக்கள் தங்கள் கிராமங்களில் நடந்துவரும் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க கோரி உயர் நீதிமன்றக் கிளை நிர்வாக நீதிபதி எம்.எம். சுந்தரேஷுக்கு கடிதம் அனுப்பினர். இக்கடிதத்தை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து விசாரித்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி,நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் மணல் கடத்தலைத்தடுப்பது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகளை கண்டிப்பான முறையில் அமல்படுத்த வேண்டும். சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல்பொதுவளம். இதைப் பாதுகாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக தலைமைச் செயலர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மணல் கடத்தலைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பாகதலைமைச் செயலர் நீதிமன்றத்தில் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x