Published : 04 Dec 2021 03:08 AM
Last Updated : 04 Dec 2021 03:08 AM

காடர் பழங்குடியின மக்களின் குடிசைகள் அகற்றம் : வனத்துறையினரின் செயலுக்கு பழங்குடியின அமைப்புகள் கண்டனம்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை அருகே கல்லாறு குடி கிராமம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் மூத்த பழங்குடிகளான காடர்கள் இங்கு வசித்து வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு பெய்த கனமழையில் இந்த கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் சிதைந்துவிட்டன. இதையடுத்து அப்பகுதியில் இருந்து வெளியேறிய காடர் பழங்குடியின மக்கள், தெப்பக்குளமேடு பகுதியில் குடியேறினர்.

வன பாதுகாப்புச் சட்டத்தை காரணம் காட்டி அங்கிருந்து அவர்களை வெளியேற்றிய வனத்துறை, தமிழ்நாடுதேயிலை தோட்டக் கழக வீடுகளில் தங்க வைத்தனர். வனஉரிமை சட்டப்படி நிலம் பழங்குடியினர் உரிமை என்பதால்பூர்வீக நிலமான தெப்பக்குளமேட்டில் குடியிருக்க இடம் ஒதுக்க வேண்டும்எனக்கோரி இரண்டரை ஆண்டுக்காலமாக பல்வேறு போராட்டங்களை காடர் பழங்குடியின மக்கள் நடத்தினர்.

இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு 21 குடும்பங்களுக்கு பட்டா வழங்கியது. அந்த இடத்தில் காடர் இன மக்கள் குடிசை அமைத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் அங்கு சென்ற வனத்துறையினர் குடிசை களை அப்புறப்படுத்தினர். இதனால் காடர் பழங்குடியினர் வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து பழங்குடியின மக்கள் கூறும்போது, ‘‘கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு இங்குள்ள 21 குடும்பங்களுக்கு தலா 1.5 சென்ட் இடம் கொடுத்தனர். அங்கு தான் குடிசை அமைத்து வந்தோம். இரண்டு நாட்களில் குடிசையில் குடியேற எண்ணியிருந்தோம். அதற்குள் வனத்துறையினர் குடிசையைப் பிரித்துவிட்டனர்,’’ என்றனர்.

இது குறித்து வனச்சரகர் மணிகண்டன் கூறும்போது, ‘‘அரசு 21 குடும்பங்களுக்கு பட்டா வழங்கிய இடத்தில் குடிசை அமைக்காமல் பட்டா கொடுத்த இடத்துக்கு அருகில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் 5 குடிசைகளை அமைத்திருந்தனர். அதில் ஒரு குடிசையை மட்டுமேஅப்புறப்படுத்தினோம். வனநில உரிமை பட்டாவில் குறிப்பிட்டுள்ள இடத்தை விடுத்து அருகே உள்ள வனப்பகுதியை ஆக்கிரமித்துகுடிசை அமைப்பது சட்டவிரோதம் எனஎடுத்துரைக்க முற்பட்டோம் . ஆனால்கல்லாறுகுடி மக்கள், வனத்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் வனப்பணியாளர்கள் ஒரு குடிசையை மட்டும் அகற்றி விட்டு சம்பவ இடத்தில் இருந்து வெளியே வந்துவிட்டனர்,’’ என்றார்.

இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க கோவை மாவட்ட தலைவர் பரமசிவம் கூறும்போது, ‘‘வனநிலஉரிமை சட்டத்தின்படி பட்டா கொடுத்தஇடத்தை இதுவரை வருவாய் துறை அளவீடு செய்து 21 குடும்பங்களுக்கும் பங்கீடு செய்து தரவில்லை. பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் அவர்கள் குடிசை அமைத்துள்ளனர். அந்த இடம் பட்டா அளித்த இடத்துக்குஅருகே உள்ள இடம் என்றால், அதுகுறித்து பழங்குடி மக்களுக்கு தெளிவாக விளக்கம் அளித்து குடிசைகளை அப்புறப்படுத்த அவர்களுக்கு உரிய நேரம் அளித்திருக்க வேண்டும். அதைவிடுத்து, பழங்குடி மக்களின் குடிசைகளை அகற்றியது கண்டிக்கதக்கது,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x