Published : 20 Nov 2021 03:07 AM
Last Updated : 20 Nov 2021 03:07 AM

ஈஷா சார்பில் பூச்சி மேலாண்மை குறித்த களப் பயிற்சி :

கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது: ஈஷா விவசாய இயக்கம் சார்பில், செம்மேடு கிராமத்தில் உள்ள ஈஷா இயற்கை விவசாயப் பண்ணையில் ‘பூச்சிகளை கவனிங்க’ என்ற தலைப்பில் விவசாய களப் பயிற்சி கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெற்றது. பூச்சியியல் வல்லுநர் செல்வம் அளித்த பயிற்சியில் கோவை, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, தூத்துக்குடி, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 54 விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகள் தனித்தனிக் குழுவாக பிரிந்து சென்று பண்ணையில் இருந்த பூச்சிகளை பார்வையிட்டனர். மேலும், பூச்சிகளை பிடித்து வந்து ஆய்வு செய்தனர்.

பூச்சிகளின் உடல் அமைப்பு பற்றி விரிவாக புரிந்துகொள்வதற்காக விவசாயிகளே பூச்சிகளின் படங்களை வரைந்தனர். இயற்கை விவசாயத்தில் பூச்சிகளின் பங்கு, நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள், நன்மை செய்யும் பூச்சிகளை வரவழைக்கும் வழிமுறைகள், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை ஆகியவை குறித்து இப்பயிற்சியில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. பூச்சிக்கொல்லிகளின் அதீத பயன்பாட்டால் தான் பயிர்களில் விஷத்தன்மை அதிகரிக்கிறது. ஆகவே, இதை முற்றிலும் தடுக்கும் விதமாக இயற்கை முறையில் பூச்சிகளை மேலாண்மை செய்யும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x