Published : 09 Nov 2021 03:09 AM
Last Updated : 09 Nov 2021 03:09 AM

பெரியநாயக்கன்பாளையம் அருகே - பள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட குட்டியானை கவலைக்கிடம் :

கோவை நாயக்கன்பாளையம் அருகிலுள்ள சிஆர்பிஎஃப் வளாகத்துக்குள் கடந்த 6-ம் தேதி வந்த ஆண் குட்டி யானை ஒன்று, மழை ஈரத்தால் அங்கிருந்த சிறிய பள்ளத்தில் வழுக்கி விழுந்துவிட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற வனப்பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் யானைக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், கயிறு கட்டி யானையை பள்ளத்திலிருந்து மீட்டனர். அதைத்தொடர்ந்து யானை எழுந்து வனப்பகுதியை நோக்கிச் சென்றது. இந்நிலையில், வனப்பகுதிக்கு வெளியே பட்டா நிலத்தில் நேற்று அந்த யானை எழுந்திருக்க முடியாமல் படுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பக வன கால்நடை உதவி மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, “யானைக்கு சுமார் 6 வயது இருக்கும். கடந்த ஒரு வாரமாக உடல் சோர்வான நிலையில் சிஆர்பிஎஃப் வளாகத்தை சுற்றி வந்துள்ளது. யானைக்கு நீர்ச்சத்து குறைபாடு உள்ளது. தண்ணீர் ஏதும் அருந்தவில்லை. கவலைக்கிடமான நிலையில் யானை உள்ளது. தொடர் சிகிச்சை அளித்து வருகிறோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x