Published : 04 Nov 2021 03:12 AM
Last Updated : 04 Nov 2021 03:12 AM

காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு : முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

இரண்டாம்‌ நிலை காவலர்கள்‌ முதல்‌ தலைமைக்‌ காவலர்‌ வரையிலான காவலர்கள்‌ அனைவருக்கும்‌ வாரத்தில்‌ ஒருநாள்‌ ஓய்வு வழங்க முதல்வர்‌ மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்‌.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சட்டப்‌பேரவையில்‌, கடந்த செப். 13-ம் தேதி நடந்த காவல்‌துறை மானியக்‌ கோரிக்கையின்‌ மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின், ‌‘காவலர்கள்‌ தங்கள்‌ உடல்‌நலனை பேணிக்‌ காத்திட ஏதுவாகவும்‌, தங்களது குடும்பத்தினருடன்‌ போதிய நேரம்‌ செலவிடுவதற்காகவும்‌, இரண்டாம்‌ நிலை காவலர்கள்‌ முதல்‌ தலைமைக்‌ காவலர்‌ வரையிலான காவலர்கள்‌ அனைவருக்கும்‌ வாரத்தில்‌ ஒரு நாள்‌ ஓய்வு வழங்கப்படும்‌’ என்று அறிவித்தார்‌.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும்‌ விதமாக, காவலர்கள்‌ தங்கள்‌ உடல்‌நலனை பேணிக்‌ காத்திட ஏதுவாகவும்‌, தங்களது குடும்பத்தினருடன்‌ போதிய நேரம்‌ செலவிடுவதற்காகவும்‌, இரண்டாம்‌ நிலை காவலர்கள்‌ முதல்‌, தலைமைக்‌ காவலர்‌ வரையிலான காவலர்கள்‌ அனைவருக்கும்‌ வாரத்தில்‌ ஒருநாள்‌ ஓய்வு வழங்கிட முதல்வர்‌ மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்‌. அதற்கான அரசாணை நேற்று (3-ம் தேதி) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவலர்களின்‌ நலனை கருத்தில்‌ கொண்டு, முதல்வர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, காவல்‌ பணியில்‌ இடையறாது ஈடுபட்டு, சவாலான பணிகளை எதிர்கொள்ளும்‌ காவலர்களுக்கு அருமருந்தாக விளங்குவதோடு, புத்துணர்வோடும்‌, உற்சாகத்தோடும்‌ தங்கள்‌ பணியினை அவர்கள்‌ மேற்கொள்ள வழிவகுக்கும்‌‌. இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x