Published : 03 Nov 2021 03:10 AM
Last Updated : 03 Nov 2021 03:10 AM

பிரபல ரவுடி உட்பட 3 பேர் கைது :

திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் ரஸ்தா வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பிச்சையா மகன் லட்சுமணகாந்தா என்ற கருப்பா(25). பிரபல ரவுடியான இவர் மீது திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு கொலை, குற்ற வழக்குகள் உள்ளன.

இவரை 3 மாவட்ட போலீஸாரும் தேடி வந்த நிலையில், லட்சுமணகாந்தா கோயம்புத்தூரில் பதுங்கி இருந்து அடிக்கடி தஞ்சாவூருக்கு வந்து செல்வதாக தஞ்சாவூர் எஸ்.பி ரவளிப்ரியாவுக்கு தகவல் கிடைத்ததால், லட்டுமனகாந்தாவை பிடிக்க தனிப்படை போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன், தலைமைக் காவலர் உமாசங்கர், காவலர்கள் அருண்மொழி, அழகுசுந்தரம், நவீன், சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப் படையினர், கோவை செல்வதற்காக தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த லட்சுமணகாந்தா மற்றும் அவருடன் வந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு திருநல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்த ராமையன் மகன் மோகன் (21), கபிஸ்தலம் குயவர்தெருவைச் சேர்ந்த இளங்கோ மகன் முத்தமிழ்ச்செல்வன்(29) ஆகியோரையும் மடக்கிப் பிடித்தனர்.

அப்போது, லட்சுமணகாந்தா போலீஸாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றபோது தவறி விழுந்ததில், அவரத கால் எலும்பு முறிந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸார், லட்சுமணகாந்தாவை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து பாப்பாநாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x