Published : 01 Jul 2021 03:16 AM
Last Updated : 01 Jul 2021 03:16 AM

கடலூர் - புதுச்சேரி எல்லையில் ரவுடிகள் இடையே மோதல் நாட்டு வெடிகுண்டு வீச்சில் 3 பேர் படுகாயம் :

தமிழகம் - புதுச்சேரி ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில், 3 ரவுடிகள் பலத்த காயமடைந்தனர்.

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தாடி அய்யனார். ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி, கஞ்சா மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட இவர், ஒரு மாதத்துக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். இருந்த போதிலும், 42 நாட்கள் அவர் ஊருக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் அவரது ஊருக்கு அருகில் 2 கி.மீ தொலைவில் தமிழ்நாடு எல்லையில் இருக்கும் கீழ் குமாரமங்கலம் மலட்டாறு ஓரத்தில் மீன் குட்டை பகுதியில் தங்கியிருந்தார்.

தாடி அய்யனாருக்கும், கீழ் குமாரமங்கலம் ரவுடி தேவா, கரிக்கலம்பாக்கம் ஜோசப் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த தாடி அய்யனாரையும் அவரது நண்பர் வேல்முருகனையும், தேவா மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெட்டினர்.

மேலும், நாட்டு வெடிகுண்டையும் வீசியுள்ளனர். இதில் வெடிகுண்டை வீசிய தேவாவுக்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த தேவா கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தாடி அய்யனார், வேல்முருகன் ஆகியோர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கடலூர் ரெட்டிச்சாவடி மற்றும் புதுச்சேரி மாநில போலீஸாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரவுடிகளுக்குள் நடந்த மோதல் தொடர்பாக போலீஸார் கூறுகையில், “தாடி அய்யனார், ஜோசப் இருவரும் தொடக்கத்தில் கூட்டாளிகளாக இருந்தனர். ‘யார் தலைமை’ என்ற மோதலால் இரு குழுவாக பிரிந்தனர். தாடி அய்யனார் சிறையிலிருந்து வந்ததும் அவரது ஆதரவாளர் மோட்ச ரவியை, ஜோசப் தரப்பினர் சில வாரங்களுக்கு முன்பு கொலை செய்தனர். இதனால் ஜோசப் மற்றும் அவரது ஆதரவாளர்களை கொலை செய்ய திட்டமிட்ட நிலையில், அவர்களுக்குள் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது” என்று தெரிவித்தனர்.

இந்த மோதலில் தொடர்புடைய ரவுடிகளை பிடிக்க ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் ஒரு தனிப்படையும், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலை மையில் 2 தனிப்படைகளும், டெல்டா போலீஸார் தலைமையில் ஒரு தனிப்படை என 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டு ரவுடி களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x