Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM

உயிரிழந்த கணவரின் பணி சான்று கோரி - வங்கி வாசலில் கருப்பு கொடியுடன் 98 வயது மூதாட்டி போராட்டம் :

வாலாஜாவில் உயிரிழந்த கணவரின் பணிச்சான்று கோரி கருப்புக் கொடியுடன் வங்கி வாசலில் போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி சின்னம்மாள்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மேட்டு தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ். ராணுவத்தில் பணியாற்றியவர் மற்றும் இரண்டாவது உலகப் போரில் பங்கேற்றுள்ளார். இவர், கடந்த 1950-ம் ஆண்டு வாலாஜாவில் உள்ள ஒரு வங்கியில் பாதுகாவலராக பணியில் சேர்ந்தவர் 18 ஆண்டுகள் பணி முடிந்தநிலையில் கடந்த 1968-ல் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.

இதற்கிடையில், உயிரிழந்த ராணுவ வீரரான தேவராஜியின் குடும்பத்துக்கு வங்கியின் சார்பில் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது வரை அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

ஆனால், கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக தேவராஜியின் மனைவி சின்னம்மாள், தனது கணவர் வங்கியில் பணியாற்றி யதற்கான பணி ஆவணம் சான்றிதழ் கேட்டு போராடி வருகிறார். ஆனால், வங்கி நிர்வாகம் அதனை வழங்காமல் அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 98 வயதான சின்னம்மாள், தனது கணவரின் பணி ஆவண சான்று வழங்க வேண்டும் எனக் கோரி வாலாஜாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் வாசலில் கையில் கருப்பு கொடியுடன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பணி ஆவண சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையேற்று மூதாட்டியும், அவருடன் வந்தவர் களும் அங்கிருந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x