Published : 17 Apr 2021 03:16 AM
Last Updated : 17 Apr 2021 03:16 AM

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் - உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை : வேளாண் இணை இயக்குநர்கள் எச்சரிக்கை

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உரங் களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குநர் கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருப்பத்தூர் வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் வேளாண் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், உர மூட்டைகள் விற்பனைக்காக போதுமான அளவுக்கு இருப்பு உள்ளது. இம் மாவட்டத்தில் யூரியா 2,685 மெட்ரிக் டன், டிஏபி 340 மெட்ரிக் டன், காம்பளக்ஸ் 2,130 மெட்ரிக் டன், பொட்டாஷியம் 640 மெட்ரிக்டன் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளது.

உர மூட்டைகளை விவசாயி களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை செய்ய வேண்டும். அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்தாலோ அல்லது உரிய ஆவணங்களின்றி விற்பனை செய்வது தெரியவந்தால் உர விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி பெறாத உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. 2020-21-ம் ஆண்டு விலையிலேயே தற்போது உரங்களை விற்பனை செய்ய வேண்டும். உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாடு ஆணையின்படி உர விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உரங்கள் தட்டுப்பாடு மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) புகாராக தெரிவிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வேலாயுதம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப் பேட்டை மாவட்டத்தில் 2,910 டன் யூரியா, 435 டன் டிஏபி உரம், 920 டன் பொட்டாஷியம், 2,934 டன் காம்ப்ளக்ஸ் உரம் இருப்பில் உள்ளது. 2021-22-ம் ஆண்டில் டிஏபி பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்கள், முந்தைய ஆண்டு இருப்பாக உள்ளதால் 2020-21-ம் ஆண்டு விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும் என மத்திய உரத்துறை தெரிவித்துள்ளது. உரங்களை ஆவணங்களை இன்றி விற்பனை செய்தாலோ உர விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மானிய உரங்களை பிஓஎஸ் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண்ணை பதிவு செய்து விற்க வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும். விற்பனை செய்யும்போது உரிய ரசீது வழங்கப்பட வேண்டும். உரம் விற்பனையாளர்கள் விற்பனை உரிமத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டும் உரம் கொள்முதல் செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x