Published : 13 Dec 2020 03:15 AM
Last Updated : 13 Dec 2020 03:15 AM

நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதை சுட்டிக்காட்டி வாவிபாளையம் கிராம மக்களின் எதிர்ப்பால் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தம்

திருப்பூர்

நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதை சுட்டிக்காட்டி, உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிகளை பல்லடம் அருகே வாவிபாளையம் விவசாயிகள் நேற்று நிறுத்தினர்.

புகளூர் - இடையர்பாளையம் வரை உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பல்லடம் அருகே வாவிபாளையம் ஊராட்சியில் 7 கிலோ மீட்டருக்கு உயர் மின்கோபுரம் அமைக்கும் பணியில் பவர்கிரிட் நிறுவனத்தினர் நேற்று ஈடுபட்டனர். இதற்கு வாவிபாளையம் ஊராட்சி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் சுமார் 200 போலீஸார் குவிக்கப்பட்டனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து, திருப்பூர் கோட்டாட்சியர், பல்லடம் வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, "எங்கள் ஊராட்சியில் 21 உயர் மின்கோபுரங்கள் அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 7 கோபுரங்கள் அமைக்க எந்தவிதப் பிரச்சினையும் இல்லை. ஆனால், எஞ்சியவை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தோம். ஏற்கெனவே அளந்ததுபோல குறுகிய பாதையில் கொண்டு செல்லாமல், வேறு பாதையில் கொண்டு செல்வதால் தூரம் அதிகரிக்கிறது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் எங்கள் பகுதி விவசாயிகள் சார்பில், பொன்னுசாமி என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். வரும் வாரத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிமன்ற உத்தரவு வரும் வரை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்" என்றனர்.

இதையடுத்து, வரும் 4 நாட்களும் எந்தவித பணிகளும் மேற்கொள்ளமாட்டோம் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x