Published : 09 Dec 2021 03:08 AM
Last Updated : 09 Dec 2021 03:08 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் - தமிழக சட்டப்பேரவை பொது கணக்கு குழு ஆய்வு :

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினர், அரசின் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின்பல்வேறு திட்டப்பணிகள் தொடர்பாக நேற்று சட்டப்பேரவைபொதுக் கணக்கு குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவின் தலைவரும், பெரும்புதூர்எம்எம்ஏவுமான கு.செல்வப்பெருந்தகை, வேடச்சந்தூர், காட்டுமன்னார்கோவில், மாதவரம், ஓசூர்,திருத்துறைப்பூண்டி, சங்கரன்கோவில், பண்ருட்டி, பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் உறுப்பினர்களான காந்திராஜன், சிந்தனை செல்வன், சுதர்சனம், பிரகாஷ், மாரிமுத்து, ராஜா,வேல்முருகன், ஜவாஹிருல்லா மற்றும் சட்டப்பேரவை செயலாளரும், பொதுக்கணக்கு குழுவின் செயலாளருமான சீனிவாசன் ஆகியோர், திருமழிசை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வரதராஜபுரம் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையம், நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு, அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் அரசுதிட்டப் பணிகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினர், திருவள்ளூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி, பூண்டி அரசு மீன்குஞ்சு உற்பத்தி நிலையம், பூண்டி நீர்த்தேக்கம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இறுதியாக, பொதுக்கணக்கு குழுவினர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் 2011 முதல்2019-ம் ஆண்டு வரையான அறிக்கைகளில் உள்ள சில தணிக்கை பத்திகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட மாவட்ட உயரதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுகளில், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி, திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், பொதுக் கணக்கு குழுவினர் இன்று (டிச.9) காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x