Published : 30 Nov 2021 03:09 AM
Last Updated : 30 Nov 2021 03:09 AM

தொடர்மழை காரணமாக பாதிப்பு - ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க மண்பாண்டத் தொழிலாளர்கள் கோரிக்கை :

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் தொழில் பாதிக்கப்பட்டுள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால முன் நிவாரணமாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்கத்தினர் மாவட்டத் தலைவர் பாண்டிதுரை தலைமையில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மனுவில் தெரிவித்துள்ளது: தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் மண்பாண்ட தொழிலுக்கு தேவையான மூலப் பொருட்களான களிமண், ஆற்று மண், செம்மண், வைக்கோல் போன்றவை கிடைக்காததால் மண்பாண்டம் செய்யும் தொழில் பாதிப்படைந்துள்ளது. இதனால், எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மண்பாண்ட தொழில் செய்யும் தொழிலாளர் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் மழைக்கால முன் நிவாரணமாக ரூ,25 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும்.

மேலும், மண்பாண்ட தொழில் செய்யும் நலவாரிய அட்டை வைத்திருப்போரின் புதிய பதிவு பட்டியலை கணக்கெடுத்து, அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

பொங்கல் திருநாளுக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் 20 பொருட்களுடன், புதுப் பானையில் வைத்து பொங்கலிடும் வகையில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 2 மண் பானைகள, ஒரு மண் அடுப்பு வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x