Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM
பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் குடிநீர் திட்ட உறை கிணறுகள், நீரேற்றும் நிலையங்களை வெள்ளம் சூழ்ந்ததால் மின்மோட்டார் பழுடைந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கன மழையால் பாலாற்றில், 1903-ம் ஆண்டுக்கு பின் தற்போது, விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் செல்வதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர். நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு, பாலாற்றில் இருந்து 20 குடிநீர் திட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குடிநீர் திட்ட உறை கிணறுகளில் இருந்து நீரேற்றும் நிலையத்துக்கு நீரேற்றும் மின் மோட்டார் உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன.
மேலும் ஆற்றின் கரையோரமாக உள்ள ஊர்களுக்கான குடிநீர் கட்டமைப்புகள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதேபோல் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளும் உறை கிணறு அமைத்து நீரேற்று நிலையம் மூலம் தண்ணீர் எடுத்து குடிநீர் விநியோகம் செய்து வருகின்றன. அவையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
எனவே, குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வெள்ளம் குறைந்தபின்னர் ஆய்வுகள் செய்யப்பட்டு, சேதமடைந்தவை சீரமைக்கப்பட்டு, பின்னர்தான் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தண்ணீர் தேவையுள்ள இடங்களை அதிகாரிகள் கண்டறிந்து அங்கு லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment