Published : 14 Nov 2021 03:08 AM
Last Updated : 14 Nov 2021 03:08 AM
தமிழக-ஆந்திர மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பாலாற்றில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. திருப்பத்தூர் மாவட்ட பாலாற்றில் சுமார் 4 ஆயிரம் கன அடியும், வேலூர் மாவட்ட பாலாற்றில் சுமார் 6 ஆயிரம் கன அடியும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாறு அணைக்கட்டு பகுதியில் சுமார் 13 ஆயிரம் கன அடி தண்ணீரும் கடந்து செல்கிறது.
பாலாற்று வெள்ளத்தை அனைத்துத்தரப்பு மக்களும் ரசித்து வரும் நிலையில், மாதனூர் ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் குப்பையை ஆற்றில் கொட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாதனூர் தரைப் பாலத்தை கடந்து செல்லும் பாலாற்றில் மூன்று சக்கர வண்டியில் சேகரித்து எடுத்துவரப்பட்ட குப்பையை அப்படியே கொட்டிச் செல்லும் காட்சி அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மாதனூர் கிராம ஊராட்சி 9 வார்டுகளை கொண்டது. அங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரிக்காமல் அப்படியே பாலாற்றில் ஓடும் தண்ணீரில் கொட்டுவது இந்த திட்டத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே, பாலாற்றில் குப்பையை கொட்டிய தூய்மைப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் 3 மாவட் டங்களில் பாலாற்றின் கரைகளில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்பு களும் கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக பாலாறு பாதுகாப்பு ஆர்வலர் அம்பலூர் அசோகன் கூறும்போது, ‘‘ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் மக்களுக்கும், விவசாயிகளும் ஜீவாதாரமாக பாலாறு உள்ளது. கடந்த ஒரு மாதமாக நெஞ்சம் குளிர பாலாற்றில் வெள்ளம் ஓடுகிறது. இதை உள்ளாட்சி நிர்வாகத்தினர் பாழ்படுத்தாமல் இருப்பதை 3 மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்ய வேண்டும்’’ என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment