Published : 05 Oct 2021 03:13 AM
Last Updated : 05 Oct 2021 03:13 AM

7 மாதங்களுக்கு பின்னர் குறைதீர் கூட்டம் - ஆட்சியர் அலுவலகங்களில் சமூக இடைவெளியின்றி குவிந்த மக்கள் :

ஆட்சியர் அலுவலகங்களில் 7 மாதங்களுக்கு பின்னர் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக சமூக இடைவெளியின்றி மக்கள் குவிந்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தல், கரோனா 2-வது அலை பரவல் ஆகிய காரணங்களால் மக்கள் குறைதீர் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. தமிழகம் முழுவதும் நேற்று மீண்டும் ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டது. சுமார் 7 மாதங்களுக்கு பின்னர் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவதால், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்க மக்கள் திரண்டனர்.

இதனால், மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோரிக்கை மனுக்களை பதிவு செய்யும் இடத்தில் ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் சமூக இடைவெளியின்றி திரண்டிருந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் கடும் நெரிசல் நிலவியது. இதையறிந்த ஆட்சியர் கி.செந்தில்ராஜ் அங்கு வந்தார். `கரோனா தொற்று பரவல் முழுமையாக குறையவில்லை. அதனால் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்’ என மக்களிடம் அறிவுறுத்தினார். பின்னர், மாற்றுத்திறனாளிகளின் அருகே சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமுதா, மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x