Published : 19 Sep 2021 03:16 AM
Last Updated : 19 Sep 2021 03:16 AM

உடையார்பட்டி, சிந்துபூந்துறையில் போக்குவரத்து மாற்றம் :

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணு சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றின் மேற்கே உள்ள அனைத்து பகுதிகள் மற்றும் திருநெல்வேலி, தச்சநல்லூர் மண்டல பகுதிகளில் நாளை முதல் வரும் அக்டோபர் 20-ம் தேதி வரை பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் காரணமாக மாற்றுப் பாதையில் பொதுமக்கள் கவனமாக செல்ல வேண்டும்.

திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் 2 பகுதிகளாக நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றுக்கு மேற்கே உள்ள அனைத்து பகுதிகளுக்கும் திருநெல்வேலி, தச்சநல்லூர் மண்டலங்களுக்கு (வார்டு எண்: 1 முதல் 7 வரை, வார்டு எண 38 (பகுதி) மற்றும் வார்டு எண் 39 முதல் 55 வரை) பகுதி 2 - ல் கடந்த 26.7.2018-ம் தேதி முதல் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.

தச்சநல்லூர் மண்டலம் வார்டு எண் 5-க்கு உட்பட்ட சிந்துபூந்துறை எரியூட்டும் மயான சாலையில் நாளை முதல் அக்டோபர் 20-ம் தேதி வரை பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் உடையார்பட்டி பகுதியிலிருந்து தாமிரபரணி ஆற்றுக்கு வரும் 2 தெருக்கள் மற்றும் வடக்கு புறவழிச்சாலையில் இருந்து ஆற்றுக்கு வரும் 2 தெருக்களில் இருந்து தெற்கு நோக்கி மயான சாலைக்கு வரும் வழிகள் தடை செய்யப்படுகின்றன. அதற்கு பதிலாக எரியூட்டும் மயானத்தை அடைவதற்கு சந்திப்பு பகுதியிலிருந்து சாலைத்தெரு வழியாக சிந்துபூந்துறை நடுத்தெரு மற்றும் செல்விநகர் பகுதியை பயன்படுத்தி உடலை தகனம் செய்யும் வண்டிகள் மற்றும் பொதுமக்கள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும்.

பாதாள சாக்கடை திட்டப் பணிகளை எவ்வித தடங்கலும் இன்றி விரைவில் முடிப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x