Published : 29 Aug 2021 03:14 AM
Last Updated : 29 Aug 2021 03:14 AM

கொடைரோடு அருகே வரி ஏய்ப்பு செய்து - காரில் கொண்டு செல்லப்பட்ட 415 கிலோ வெள்ளி கொலுசுகள் : ரூ.17 லட்சம் வரி விதித்த வணிகவரித் துறை

சேலத்தில் இருந்து மதுரைக்கு வரி ஏய்ப்பு செய்து 7 கார்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான 415 கிலோ வெள்ளிக் கொலுசுகளை பறிமுதல் செய்த வணிகவரித் துறையினர் ரூ.16 லட்சத்து 93 ஆயிரம் வரி விதித்தனர்.

சேலத்தில் இருந்து மதுரைக்கு வெள்ளி மற்றும் தங்க நகைகளை கார்களில் கடத்திச் செல்வதாக, திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கொடை ரோடு அருகே சுங்கச்சாவடியில் போலீஸார் நேற்று தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக அடுத்தடுத்து வந்த ஏழு கார்களை நிறுத்தி சோதனையிட்டனர். கார்களில் சுமார் ரூ. 4 கோடி மதிப்புள்ள 415 கிலோ வெள்ளிக் கொலுசுகள் இருந்தன. உடனடியாக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதையடுத்து மதுரை, திண்டுக்கல் வணிகவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த அதிகாரிகள் பாலகுமாரன், பசல் ஆகியோர் கார்களில் வந்த 9 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் சேலத்தில் இருந்து சுமார் 4 கோடி மதிப்பிலான 415 கிலோ வெள்ளிக் கொலுசுகளை மதுரைக்கு விற்பனைக்காகக் கொண்டு செல்வதாக கூறினர். மேலும் அவர்கள் வைத்திருந்த ஆவணங்களை பரிசோதித்தபோது அவை போலி எனத் தெரியவந்தது.

இதையடுத்து ரூ.16 லட்சத்து 93 ஆயிரம் வரி செலுத்த உத்தரவிடப்பட்டது. பின்னர் வெள்ளிக் கொலுசுகள் காரில் வந்தவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x