மறவமங்கலம் கண்மாயில் குவிந்துள்ள பறவைகள்.
மறவமங்கலம் கண்மாயில் குவிந்துள்ள பறவைகள்.

காளையார்கோவில் அருகே - கண்மாயில் குவிந்த அரிய வகை பறவைகள் : சரணாலயமாக அறிவிக்க வலியுறுத்தல்

Published on

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே மறவமங்கலம் கண்மாய்க்கு ஆயிரக்கணக்கான அரிய வகை பறவைகள் வருகை தந்துள்ளன. இப்பகுதியை சரணா லயமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை பறவைகள் தங்குவதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் ஏற்ற சீதோஷ்ண நிலை உள்ளது. இதனால் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பறவைகள் இங்கு வருகின்றன.

சிவகங்கை மாவட்டம், வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன. அதேபோல் காளையார்கோவில் அருகே மறவமங்கலம் கண்மாய் நூறு ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்து, கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இதனால் இங்கு சில ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான அரிய வகை பறவைகள் வந்து தங்குகின்றன. நத்தை கொத்தி நாரை, செங்கால் நாரை, நீர்காகம், மூக்கான், நீர் கோட்டான், ஆற்று உள்ளான், கூழைகடா உள்ளிட்ட அரிய பறவைகள் அதிக அளவில் வருகின்றன.

இந்த ஆண்டு மறவமங்கலம் கண்மாயில் நீர் வற்றாததால் கடந்த ஜூலை மாதமே பறவைகள் வரத்து அதிகமாக இருந்தது. அவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இப்பகுதியை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in