Published : 23 May 2021 05:51 AM
Last Updated : 23 May 2021 05:51 AM

திண்டுக்கல்லில் - கரோனா தடுப்பூசி செலுத்த மக்கள் அதிக ஆர்வம் :

திண்டுக்கல் மாநகராட்சி கமலா நேரு மருத்துவமனையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத நிலையே நிலவுகிறது. இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு 290 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் 19 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து கரோனா குறித்த விழிப்புணர்வு, திண்டுக்கல் மக்களிடம் அதிகம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு தொடக்கத்தில் அரசின் கட்டுப்பாடுகளை மதிக்காமல் சுற்றிவந்த மக்களுக்கு, கடந்த ஒரு வாரமாக திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரிப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஊரடங்கு தொடக்கம் போல் இல்லாமல் வெளியில் மக்கள் நடமாட்டம் கடந்த சில நாட்களாக குறைவாகவே உள்ளது.

இந்நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த வாரம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என வாட்ஸ் ஆப்-ல் மக்களை அழைக்கும் நிலை இருந்தது. ஆனால் சில தினங்களாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. திண்டுக்கல் கமலா நேரு மருத்துவமனையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x