Published : 16 Apr 2021 03:12 AM
Last Updated : 16 Apr 2021 03:12 AM

செங்கை, காஞ்சி, திருவள்ளூரில் மழை :

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று முன்தினம் சில இடங்களில் லேசான தூறல் மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் முதல் இரவு முதல் காலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது.

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை 20 நிமிடங்கள் வரை பெய்தது. கனமழை பெய்யாவிட்டாலும் லேசாக மழையிலேயே வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் மழையால் மக்களிடையே தொற்று குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, சோழவரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன், மழை பெய்தது.

மழை காரணமாக, திருவொற்றியூர்-பொன்னேரி நெடுஞ்சாலை, சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலை உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல, திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது.

இம்மாவட்டங்களில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு வருமாறு: திருப்போரூர் 12.2 மிமீ, திருக்கழுக்குன்றம் 18.6, மாமல்லபுரம் 25.4, செய்யூர் 23, கேளம்பாக்கம் 19.6 மிமீ. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்புதூர் 30.40, காஞ்சிபுரம் 40.20 மிமீ. திருத்தணி 7.7 செ.மீ., பள்ளிப்பட்டு 5.6 செ.மீ., சோழவரம் 2.6 செ.மீ., பொன்னேரி 1.7 செ.மீ., ஊத்துக்கோட்டை 1.3 செ.மீ., செங்குன்றத்தில் 1.1 செ.மீ. மழை பெய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x