Published : 19 Jan 2021 06:50 AM
Last Updated : 19 Jan 2021 06:50 AM

பவர் கிரிட் நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மூங்கில்தொழுவு பிரிவில் கடந்த சில நாட்களாக அப்பகுதி விவசாயிகள் சிலர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் இழப்பீட்டுத் தொகை வழங்காத நிலத்தின் வழியாக மின்கோபுரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை தடுத்து நிறுத்திய விவசாயிகள் இழப்பீடு வழங்கிய பின் பணிகளை தொடர வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, ‘‘மூங்கில்தொழுவு கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தில் தென்னை, முருங்கை, பப்பாளி, பயறு வகை, காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்யப் பட்டுள்ளன. இவ்வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு தென்னைக்கு இழப்பீடாக ரூ.36,500, முருங்கை மரம் ஒன்றுக்கு ரூ.1,500, பப்பாளி மரம் ஒன்றுக்கு ரூ.800, பயறு வகை பயிர்களுக்கு ஒரு சென்ட் ரூ.800-ம் ஆழ்குழாய்க்கு ரூ.1,18,000, கிணறுகளுக்கு ரூ.1,30,000 இழப்பீடாக வழங்க மத்திய அரசு வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பவர் கிரிட் நிறுவன அதிகாரிகள் இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்க மறுத்து விவசாயிகளை அலைக்கழித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. நிலத்தை கையகப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. இதனை கண்டித்து 10 நாட்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நேற்று (ஜன.18) நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. அதனால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். குடிமங்கலம் ஆய்வாளர் ஓம்பிரகாஷ் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x