Published : 19 Jan 2021 06:50 AM
Last Updated : 19 Jan 2021 06:50 AM

குடியிருப்பு பகுதியில் புகுந்த மழைநீர்: சாலை மறியலில் ஈடுபட்ட 56 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் நல்லூர் அருகே காசிபாளையம் ஜே.ஜே.நகர் பகுதியில் மழைநீர் வழிந்தோட வழியின்றி குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜே.ஜே. நகர், பள்ளக்காட்டு காலனி பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் முழங்கால் அளவுக்கு நேற்றும் தண்ணீர் தேங்கியது. அதோடு கழிவுநீரும் சேர்ந்ததால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், நல்லூர் - காசிபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

ஊரக காவல் நிலைய போலீஸார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், "கோவில்வழி அருகே காட்டு பகுதியில் சேகரமாகும் மழைநீர் பள்ளத்தில் வழிந்தோடி செவந்தாம்பாளையம், பல்லக்காட்டுபுதூர் வழியாக ஜே.ஜே. நகர் வந்த பிறகு, தனியார் இடத்துக்குள் சென்று நொய்யலில் கலக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட தனியார், அவரது இடத்துக்குள் தண்ணீர் வராமல் தடுத்துவிட்டார். இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்குகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விரைவில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் சுமார் 3 மணி நேரம் மறியல் தொடர்ந்ததால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 56 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x