Published : 11 Jan 2021 03:24 AM
Last Updated : 11 Jan 2021 03:24 AM

இலங்கை தமிழ் மக்களின் நலன், உரிமைக்கு மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்க வேண்டும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்

இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்டஅலுவலகம் திறப்பு விழா, மாற்றுக் கட்சியினர் இணையும் விழா மற்றும்தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ஆகியவை திருப்பூர் காந்தி நகரில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது:

இந்து மக்கள் கட்சியின் நீண்ட கால கோரிக்கை கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதே. தற்போதைய சூழலில் கச்சத்தீவு என்பது இந்தியாவுக்கு சொந்தமானது என்று நிலைநாட்டக் கூடிய முயற்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் குடியரசு தினத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அல்லது தமிழக அரசின் பிரதிநிதியோ, மத்திய அரசின் பிரதிநிதியோ அங்கு தேசியக்கொடியை ஏற்ற வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இதை எப்படியாவது சிதைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடுதான், இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டுள்ளது. அதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கை தமிழ் மக்களுடைய நலனுக்கும், உரிமைக்கும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டது குறித்து முழுமையான நடவடிக்கையை அரசு எடுத்து, மீண்டும் அந்த இடத்தில் நினைவிடத்தை அமைக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுமே சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்துக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. இந்த போலி மதச்சார்பின்மையை முறியடிக்க, இந்து தமிழர் வாக்கு வங்கி உருவாகவேண்டும். தமிழகத்தில் ஆட்சி, அரசியல் மாற்றம், ஆன்மீக அரசியல் கொள்கையை முன்னெடுத்து, இந்து மக்கள் கட்சி செல்லும். இவ்வாறு அவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x