Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM

சேவூர் அருகே குப்பைக் கிடங்கில் மீட்கப்பட்ட சிறுமியின் இறப்புக்கான காரணம் அறிய உடல் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பிவைப்பு

சேவூர் அருகே குப்பைக் கிடங்கில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட சிறுமியின் உயிரிழப்புக்கான முழுகாரணத்தை கண்டறிய, உடல் உறுப்புகள் சேகரிக்கப்பட்டுஆய்வுக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே தண்டுக்காரம்பாளையம் ஊராட்சி புளியம்பட்டி சாலையில் குப்பை தரம் பிரிக்கும் கிடங்கில், கடந்த 25-ம் தேதி 5 வயது சிறுமி மயக்க நிலையில் மீட்கப்பட்டார். கோவையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.

முன்னதாக, சிறுமியின் தாயார்சைலஜாகுமாரி (எ) சர்மிளாகுமாரியை (39) சேவூர் போலீஸார் பிடித்து விசாரித்ததில், மருத்துவர் என்பதும், சிறுமியின் பெயர் கைரா என்பதும், பெங்களூருவிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிறுமிக்கு சைலஜாகுமாரி மருந்து கொடுத்ததாகவும், கொடுக்கப்பட்ட மருந்தின் அளவு அதிகமானதால் சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டதும், அப்போது சிறுமியை தனியாக விட்டுச்சென்ற சைலஜாகுமாரி மனஉளைச்சலில் விஷம் சாப்பிட்டதும் தெரிய வந்தது.

கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு, அவரது தந்தை தர்மபிரசாத் மற்றும் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

கோவையில் உள்ள மின் மயானத்தில் சிறுமியின் உடலை தகனம் செய்தனர்.

இந்நிலையில், சிறுமி உயிரிழப்புக்கான காரணம் குறித்த முழு விவரத்தை அறிய, அவரது உடல்உறுப்புகள் சேகரிக்கப்பட்டுஆய்வுக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளன.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "சிறுமியின் பிரேத பரிசோதனையில், உயிரிழப்புக்கான சரியான முடிவு வரவில்லை. இதனால், அவரது உடல் உறுப்புகள்சேகரிக்கப்பட்டு தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவில், முழு காரணம் தெரிந்துவிடும். சிறுமியின் தாயாரிடம் தொடர்ந்து விசாரிக்கிறோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x