Published : 05 Jan 2021 08:22 AM
Last Updated : 05 Jan 2021 08:22 AM

குற்றச் சம்பவங்களைத் தடுக்ககிராமங்களில் சிறப்பு காவலர்கள் நியமனம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க, மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அவிநாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் சரகத்துக்கு உட்பட்ட அவிநாசி, சேவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சட்ட விரோத செயல்கள், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும், சந்தேகிக்கப்படும் நபர்களை உடனடியாக தெரியப்படுத்துவதற்காகவும் சிறப்புக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, அவிநாசி காவல் எல்லைக்கு உட்பட்ட 14, சேவூர் காவல் எல்லைக்கு உட்பட்ட 16 என 30 கிராமங்களை கண்காணிக்கும் வகையில் 30 காவலர்கள் நியமிக்கப்பட்டு மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, "அந்தந்த கிராமப் பகுதிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் புகைப்படம், அவர்களது அலைபேசி எண்ணுடன் கூடிய தகவல் பெயர்ப்பலகை கிராமங்களில் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக பொதுமக்கள் உடனடியாக அந்தந்த காவலர்களுக்கு குற்றச் சம்பவங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கலாம். முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதன் மூலமாக குற்றங்களை தடுக்க முடியும். முதற்கட்டமாக அவிநாசி, சேவூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. இதன் வெற்றியை பொறுத்து, பிற பகுதிகளிலும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x