Published : 28 Dec 2020 07:16 AM
Last Updated : 28 Dec 2020 07:16 AM

சிப்காட் தொழில் பூங்கா திட்டத்தை கைவிட வேண்டும் அரசாணை வெளியிட கிராம மக்கள் வலியுறுத்தல்

தத்தனூர் சிப்காட் தொழில் பூங்கா திட்டத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத்துக்கு உட்பட்ட தத்தனூர், புஞ்சைதாமரைக்குளம், புலிப்பார்ஊராட்சிகளை சேர்ந்த பகுதிகளுக்குரிய சுமார் 890 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி, சிப்காட் மூலமாக தத்தனூர் தொழில் பூங்கா என்ற திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முதற்கட்ட பணிகளைமுன்னெடுத்து வருகிறது.

இத்திட்டத்தை எதிர்த்துமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிப்காட் தொழில் பூங்கா குறித்த மக்கள் விளக்கக் கூட்டம், தத்தனூர் அடிபெருமாள்கோயில் அருகே நேற்று நடைபெற்றது. திட்ட எதிர்ப்பு இயக்கஒருங்கிணைப்பாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்கள் எம்.வேலுசாமி, சம்பத்குமார் உள்ளிட்டோர் பேசினர். 3 ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தத்தனூர் தொழில் பூங்கா திட்டத்தை ரூ.2,500 கோடியில் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. பல தலைமுறை வாழ்வாதாரமாக இருந்த விளைநிலத்தை, உரிமையாளர்களான விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தி தொழில் பூங்கா என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனத்துக்கு கொடுக்க நினைப்பது எந்த வகையில் சரியானது? விவசாயத்தில் மிகவும் பின்தங்கியுள்ள, விவசாயத்துக்கு பயன்படாத நிலங்கள் உள்ள பகுதியில் கொண்டுவர வேண்டிய சிப்காட் தொழில் பூங்காவை, அத்திக்கடவு - அவிநாசிபாசனப் பகுதியில் கொண்டுவரவேண்டாம். விவசாயிகளின்வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும். எங்களுக்கு விவசாயம் மற்றும் அதை சார்ந்ததொழில்களே போதும். தொழில் பூங்கா மற்றும் அதை சார்ந்த வேலைகள் வேண்டாம். அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிக்கு ஏற்ப, இத்திட்டத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு அரசாணை வெளியிடவேண்டுமெனவலியுறுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x