Published : 21 Dec 2020 03:15 AM
Last Updated : 21 Dec 2020 03:15 AM

இரும்பு உருக்கு ஆலை கொள்ளை வழக்கில் ரூ.15 லட்சம் செம்புத் தகடுகள் பறிமுதல்; 8 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே சின்னக்கானூர் பகுதியில் தனியார் இரும்பு உருக்கு ஆலை செயல்படுகிறது. கடந்த மாதம் இரவு நேரத்தில்ஆலைக்குள் புகுந்த மர்ம நபர்கள், காவலரை தாக்கி பல லட்சம் மதிப்பிலான செம்புத் தகடுகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக சேவூர் காவல் ஆய்வாளர் பிரேமா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அன்பரசு, காமராஜ் அடங்கிய தனிப்படையினர் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், சேவூர் அருகே ஆலத்தூர் சோதனைச்சாவடியில் சந்தேகத்துக்குரிய வகையில் வேனில் வந்த 8 பேர் கும்பலை பிடித்து விசாரித்ததில், கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியைச் சேர்ந்த ஜே.உஷேன் (23), கே.ஜெயப் பிரகாஷ் (20), ஜி.ஆறுமுகம் (33), ஆலாங்கொம்பு பகுதியைச் சேர்ந்த கே.விஜயன் (32), மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆர்.முனியப்பன் (33), ஏ.முருகேசன் (40), எல்.நாகராஜ் (45), அன்னூரை சேர்ந்த கே.ஆனந்தன் (37) ஆகியோர் என்பதும், இரும்பு உருக்கு ஆலை கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, 8 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான செம்புத் தகடுகள் மற்றும் கார், வேன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x