Published : 21 Dec 2020 03:16 AM
Last Updated : 21 Dec 2020 03:16 AM

ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இருந்து ரசாயன கழிவுநீர் எடுத்து சென்ற லாரி பறிமுதல் சார் ஆட்சியர் இளம்பகவத் நடவடிக்கை

சிப்காட்டில் இருந்து ஆந்திராவுக்கு ரசாயன கழிவுநீரை எடுத்துச்செல்ல முயன்ற லாரியை சார் ஆட்சியர் இளம்பகவத் பறிமுதல் செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலை யில் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் மருந்துகள் தயாரிக்கும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் இருந்து முறையாக சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவுகள் லாரிகள் மூலம் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜூக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

அவரது உத்தரவின்பேரில், ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் தலைமையிலான வருவாய்த் துறையினர் திருவலம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ் வழியாக ஆந்திர மாநில பதிவெண் கொண்டலாரி ஒன்று வந்தது. அதை அதிகாரிகள் மடக்கினர். அந்த லாரியை சோதனையிட்டபோது அதில் முறையாக சுத்திகரிக்கப் படாத ரசாயன கழிவுநீர் ஆந்திரா வுக்கு எடுத்துச்செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த லாரியில் இருந்த ரசாயன கழிவுநீரில் சிறிதளவு சோதனைக்காக எடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, லாரியை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினர் சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், முறையாக சுத்திகரிக்கப்படாத கழிவுரை வெளிமாநிலத்துக்கு எடுத்துச்செல்ல முயன்ற தனியார் மருந்து மற்றும் ரசாயன தொழிற்சாலையின் மின்சாரத்தை துண்டிக்கவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொள்ளவும் சார் ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டார். அதன்பேரில், அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x