Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் 4 சிக்னல்கள் அமைக்கப்படும் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் தகவல்

திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேவைப்படும் 4 இடங்களில் கூடுதலாக போக்குவரத்து சிக்னல்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் தெரிவித்தார்.

தொழில் நகரமான திருப்பூரில் பிரதான சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இதற்கேற்ப நகருக்குள் அகலமான சாலை வசதிகள் இல்லை, சுற்றுச்சாலை வசதிகளும் அணுகக்கூடிய வகையில் இல்லை.இதனால் கனரக வாகனங்கள் முதல் இருசக்கர வாகனங்கள் வரை குறிப்பிட்ட நேரங்களில் ஒருங்கேசெல்வதால் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகள் நடைபெறுவதால், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண மாற்றுப்பாதை செயல்பாடு, ஒருவழிப்பாதை இயக்கம், கனரக வாகனங்களை குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டும் மாநகருக்குள் அனுமதித்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மாநகர காவல் துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக நகருக்குள் தேவைப்படும் இடங்களில் கூடுதலாக போக்குவரத்து சிக்னல்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் வீரபாண்டி உள்ளிட்ட 4 இடங்களில் கூடுதலாக போக்குவரத்து சிக்னல்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x