Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீரின் நிறம் மாறியதால் அதிர்ச்சி பூலுவப்பட்டி சாய ஆலைகளில் ஆய்வு நடத்த வலியுறுத்தல்

திருப்பூரில் குடியிருப்புப் பகுதிகளில் நிலத்தடி நீர், நிறம் மாறிவரும் விவகாரத்தில் சாய ஆலைகள் முறையாக கழிவுநீரை சுத்தம் செய்கின்றனவா என மாநகராட்சி மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பெருமாநல்லூர் சாலை மும்மூர்த்தி நகர், பூலுவப்பட்டி, மொராஜ் தேசாய் நகர், நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், கடந்த சிலநாட்களாக சிவப்பு நிறத்தில் நிறம் மாறிவருவதால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து வரும் நிலத்தடி நீர் சிகப்புநிறத்தில் மாறி நுரையுடன் வருகிறது. நீரில் உப்புத் தன்மை அதிகமாக உள்ளது.

இந்த தண்ணீரில் குளித்தால், ஒவ்வாமை ஏற்பட்டு உடலில் அரிப்புஏற்படுகிறது. அதிக செலவு செய்து ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தும், அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வெளியில் பணம் கொடுத்து, லாரிகளில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

மாநகராட்சி சார்பில் பூலுவப்பட்டி பகுதியில் பெரிய பாறைக்குழியில் தண்ணீர் இருந்தபோதே, குப்பையை கொட்டி மூடிவிட்டனர்.தற்போது அதற்கு அருகேயுள்ளமற்றொரு பாறைக்குழியில் தண்ணீர் உள்ள போதே குப்பைகொட்டப்படுகின்றன. இதைத்தவிர,பூலுவப்பட்டி பகுதியில் உள்ள சாயப் பட்டறைகளில் சேகரமாகும் கழிவுநீர், சுத்திகரிப்பு செய்யாமல் பாறைக்குழி மற்றும் நிலத்தின் அடியில் விடப்படுவதாக தெரிகிறது. மாநகராட்சி மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x