Published : 09 Dec 2020 03:14 AM
Last Updated : 09 Dec 2020 03:14 AM

விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை, திருப்பூரில் கடையடைப்பு ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டவர்கள் கைது; மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, நேற்று நாடு தழுவிய ‘பந்த்’ போராட்டத்துக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நேற்று கடைகள் அடைப்பு, ஆர்ப்பாட்டம், மறியல் போன்றவை நடத்தப்பட்டன.

கோவை மாநகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டி ருந்தன. முக்கிய வர்த்தக நிறுவ னங்கள் வழக்கம் போல இயங்கின.

60 சதவீத குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதாக தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இடதுசாரி கட்சி சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ, வேன், டாக்ஸி போன்ற வாகனங்கள் ஓடவில்லை. வழக்கம்போல பேருந்து போக்கு வரத்து இயங்கியது. பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு அசம்பாவிதசம்பவங்களை தடுக்க முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக, மாநகரில் காவல் ஆணையர் சுமித்சரண் தலைமையில் 1,200 போலீஸாரும், மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அன்னூர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை அன்னூர் போலீஸார் கைது செய்தனர். ஹோப்காலேஜ் பாலரங்கநாதபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாண்டியன் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். மாவட்ட தலைவர் ராஜாஉசேன் தலைமையில் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் நேற்று கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். மதிமுக சார்பில், விகேகே மேனன் சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு, மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவை ஒருங் கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு, நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் அதிகாரம் அமைப்பினர் பவர் ஹவுஸ் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்

திருப்பூர் மாநகர பகுதிகளில் காலை முதலே அவிநாசி சாலை, பல்லடம் சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, புது மார்க்கெட் வீதி, பெருமாநல்லூர் சாலை, மங்கலம் சாலை மற்றும் பிரதான சாலைகள், வீதிகள், சந்திப்புகளில் மருந்து கடைகள், மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள், பால் விற்பனை நிலையங்கள் ஆகியவை தவிர, ஓட்டல்கள், துணிக்கடைகள், பேக்கரிகள், சிற்றுண்டி மையங்கள், வணிக வளாகங்கள் 90 சதவீதம் அடைக்கப்பட்டிருந்தன.

அவிநாசி, பல்லடம், ஊத்துக் குளி, மங்கலம், காங்கயம், குன்னத்தூர், வெள்ளகோவில், பொங்கலூர், அவிநாசிபாளையம், கொடுவாய் உள்ளிட்ட புறநகர் பகுதிகளி லும் 85 சதவீதம் கடைகள் அடைக் கப்பட்டிருந்தன.

இதுதவிர, அனுப்பர்பாளையம் பாத்திர பட்டறைகளும் வேலைநி றுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற தால் 1.5 டன் எவர்சில்வர், 1 டன் பித்தளை பாத்திரங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், அவற்றை சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்கள் என 40 சதவீதம் வரை மூடப்பட்டன. காதர் பேட்டை பின்னலாடை சந்தையிலும் விற்பனை நிறுவனங் கள் 90 சதவீதம் மூடப்பட்டிருந்தன.

திருப்பூர் புதிய பேருந்து நிலையம், உழவர் சந்தை, தென்னம்பாளையம் காய்கறி சந்தை பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின, ஆட்டோக்கள் பாதியளவு ஓடின. சரக்கு லாரிகள் ஓடவில்லை. இதனால் பின்னலாடை கள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மொத்தமாக திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக் கப்பட்டது. ஊத்துக்குளியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

உடுமலை

இதேபோல உடுமலையிலும் அனைத்து கடைகள், காய்கறி சந்தைகள் மூடப்பட்டிருந்ததால், முக்கிய சாலைகள், வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x