Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM

ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கருத்து

திமுக தலைவர் ஸ்டாலினின் முதல்வர் கனவு எப்போதும் பலிக்காது என்று தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட அவர், இதையொட்டி திருப்பூரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது: உண்மையாக உழைக்கும் தொண்டர்களால்தான் கட்சிக்கு பெருமை கிடைக்கிறது. கட்சியினரிடையே உள்ள மன வேறுபாடுகளை களையவேண்டும். வரும் பேரவைத் தேர்தலில் காங்கயம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளில் அதிமுக வெற்றி பெற வேண்டும்.

நான் கட்சியின் வெற்றிக்காக உழைப்பேன், உரிமை கொண்டாடமாட்டேன் என்று உத்தரவாதம் அளிக்கிறேன். தலைமையின் கட்டளையை ஏற்று, பாடுபட்டு, கட்சியை வலுப்படுத்துவேன். அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். யாருக்கும் தனிப்பட்ட விசுவாசம் காண்பிக்காமல், முதல்வர், துணை முதல்வரிடம் விசுவாசமாக இருங்கள்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர் சேர்ப்பு பணி நடைபெற உள்ளது. 18 வயது பூர்த்தியான அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க கட்சியினர் முன்வர வேண்டும். குடிமராமத்து திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு என பல்வேறு முன்மாதிரித் திட்டங்களை முதல்வர் பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்.

எனவே, எந்தக் காலத்திலும் மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது. அடுத்த முறையும் அதிமுகவே ஆட்சி அமைக்கும்" என்றார். கூட்டத்தில், அதிமுக மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.எல்.ஏ.-க்கள் சு.குணசேகரன், கே.என்.விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல, திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக சி.மகேந்திரன், மடத்துக்குளத்தில் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x